Wednesday, April 28, 2010

காக்கைகள் நல்லவை

காக்கைகள் நல்லவை.

மத்தியான வேலை. வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன் கொண்டிருந்தேன். எதேச்சையாக அன்னாந்துப் பார்த்தேன். சற்றுத் தொலைவில்  அந்த மின்சாரக் கம்பி மீது உட்கார்ந்திருந்த காகம்  என்னை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. அது மிகுந்த கோபத்தோடு முறைத்துப் பார்ப்பது போல் எனக்கு தோன்றியது. இதை எங்கேயோ பார்த்திருக்கோமே' என்று சிந்தித்துக் கொண்டு சென்றேன். ஒரு வேலை அன்று அம்மாவாசை சோறு சாப்பிட வந்த காக்கைகளில் இதுவும் ஒன்றாக இருக்குமோ. ஆம் நினைவுக்கு வந்து விட்டது. இது, அந்த  கைப்பிடிச் சுவரில் வைத்திருந்த சாதத்தை அஞ்சி அஞ்சி சாப்பிட வந்த போது, குழந்தை பயப்படுவாளோ என்று நான் தான் அதை விரட்டிவிட்டேன். ஆனாலும், அது ஒரு வாய் அள்ளிக்கொண்டு தான் போனது. தோற்றத்தில் பெரும்பாலான காக்கைகள் ஒன்று போல இருந்தாலும், இது என்னைப் பார்த்த விதத்தை வைத்து நான் விரட்டி அடித்த காகம்  இது தான் என்ற முடிவுக்கு வந்தேன். அதை மனதில் வைத்துக் கொண்டுதான் என்னை அப்படி பார்க்கிறதோ என்று ஒரு அச்சம் உண்டானது. நான் நினைத்தது சரிதான். கா...கா... என்று கரைந்தது.. எங்கிருந்தோ நான்கைந்து காக்கைகள் பறந்து வந்து அதன் அருகில் அமர்ந்தன. மீண்டும் கா...கா... என்று கரைந்தது. அதற்க்கு பதில் சொல்வது போல் மற்றக் காக்கைகளும் கரைந்தன. அதில் ஒன்றிரண்டு காக்கைகள் தலையை அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் ஆட்டி ஆட்டி என்னை ஒரு மாதிரி பார்த்தன.  அவர்களின் நடவடிக்கைகள் எல்லாம் என்னை கொட்டுவதற்கு தயார் ஆவது போல் தோன்றியது.  'திக்' கென்று இருந்தது.

அன்று நான் விரட்டி அடித்ததை அவர்களிடம்  சொல்லி,   என்னைப் பழிவாங்க சதித்திட்டம் திட்டுகிறதா? ஐயோ! கூட்டமாக கொட்ட வந்தால் நான் என்ன செய்வேன்...! ஒதுங்குவதற்கு ஏற்ற இடம் கூட இல்லையே..! பகவானே இந்த ஆபத்திலிருந்து என்னை காப்பாற்று. எத்தனையோ முறை இவர்கள்  என் மீது எச்சம் போட்டிருக்கிறார்கள்,  திரும்பி ஒரு வார்த்தை திட்டி இருப்பேனா...! சில முறை இறக்கையால் தலையில் அடித்துவிட்டுப் போவார்கள்; அப்போதெல்லாம் நல்ல சகுனமா கேட்ட சகுனமா என்று யோசிப்பேனே தவிர திருப்பி அடிக்கனும் என்று யோசிச்சதில்லை.   எதற்க்காக இதை எல்லாம் யோசிக்கிறேன் என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன்.

அந்த கம்பத்தை நெருங்க நெருங்க படபடப்பு அதிகமானது. கண்களை சுருக்கிக் கொண்டேன்; தலையை முடிந்த வரை உடம்புக்குள் இழுத்தேன்; காதுகள் தோள்பட்டையை தொட்டன; மேலும் உள்ளுக்கு இழுக்க முயன்றேன்; முடியவில்லை. என்னையறியாமல் உடல் விறைப்பானது.  பயம் வந்தால் அருகில் இருக்கும் எதையாவது இறுக்கமாக பிடித்துக் கொண்டு கணங்களை முடிக்க கொள்ளவோம் அல்லவா அது போலத் தான் வாகனத்தைப் பிடித்துக் கொண்டிருந்தேன். வாகனம் தானே ஓடிக் கொண்டிருந்தது. கம்பத்திற்கு மிக அருகில் வாகனம் சென்றது; என் முழு பயத்தையும் ஒன்று திரட்டி ஒரே முச்சில் வாகனத்தின் வேகத்தை கூட்டினேன் விர் ரென்று சீறிப் பாய்ந்து கம்பத்தை கடந்து சென்றேன். அச்சமயம் அந்த காக்காய் கூடத்தில் இருந்து ஒரு காகம்  பட் டென்று பறப்பது போல் தோன்றியது, என்னை கொட்டத் தான் வருகிறது என்று நினைத்தேன் குப் பென்று வேர்த்தது. கடவுள் புண்ணியம் நான் நினைத்தது போல் எதுவும் நடக்கவில்லை.

ஒருவேளை இது அந்த காகம் இல்லையோ..! இல்லை அந்த சம்பவத்தையே மறந்திருக்குமோ…! ஒரு வீடா  இரண்டு வீடா  ஞாபகம் வைத்துக் கொள்வதற்கு.   நல்ல சுரம் அடித்து விட்டது போல் உணர்ந்தேன்.  ஸூஉ... அப்பாடா... முச்சை நன்றாக இழுத்து விட்டேன். ச்சே..!போயும் போயும் காக்கையைப் பார்த்தா பயப்படுவது. என் உயரம் என்ன காக்கையின் உயரம் என்ன? என் எடை என்ன காக்கையின் எடை என்ன? என் அறிவு என்ன காக்கையின் அறிவு... ஆம் அறிவு…, இவ்வளவு  நேரம் எங்கே  போயிருந்தது இந்த அறிவு’.  என்னை நானே திட்டிக் கொண்டேன்.  

மனித குலத்தில், இந்த காக்கையைப் போல என்ன விரட்டினாலும் தன காரியத்தை சாதித்துக் கொள்ளும் சில மனிதர்களும் இருக்கிறார்கள்; ஆனால் காக்கை இனத்தில் சமயம் பார்த்து வஞ்சம் தீர்க்கும்  காக்கைகள் இல்லை. அந்த வகையில் காக்கைகள் நல்லவை. 

 


No comments:

Post a Comment