Thursday, December 2, 2010

வித்தியாசமான அனுபவம்.


நிசப்தமான காலை வேலை. குழாயில் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தேன். அந்தக் குரல் என் கவனத்தை ஈர்த்தது.
"நீ பத்திரிக்கைக்கு போ... நீ கம்பியுடருக்குப் போ... நீ I .A .S . க்கு போ..." என்றது ஒரு ஆண் குரல்.
"நான் பத்திரைக்குப் போறேன்... இல்ல, I .A .S. க்கு போறேன்... ஆனா கம்ப்யுடருக்குப் மட்டும் போமாடேன்.." என்றது ஒரு பெண் குரல்.
"ஏம்மா நீ கம்ப்யுடருக்குப் போறியா..." என்றது அதே ஆண் குரல்.
"பத்திரிக்கைக்கு போறேன்... ஆனா கம்ப்யுடேருக்குப் போமாட்டேன்..." என்றது இன்னொரு பெண் குரல்.
"சரி நீயாவது கம்ப்யுடருக்குப் போயாம்மா..!" என்று கெஞ்சலாக கேட்டது அதே ஆண் குரல்.
"இல்ல... வந்து..." என்று இழுத்தது மற்றொரு பெண் குரல்.
இந்த உரையாடல் என் கடந்த கால பதிவுகளை நினைத்துப் பார்க்கும் படி செய்தது.
கணிணித் துறை வளர ஆரம்பித்துக் கொண்டிருந்த காலம் அது. நானும் என் நண்பரும் வணிகம் பயின்றோம். நான் ஒரு கூரியர் நிறுவனத்தில் டெலிவரி பாய் வேலைக்குச் சென்றுவிட்டேன். வழியில் ஒரு நாள் அந்த நண்பனைப் பார்க்க நேர்ந்தது.
"ஏய்... எப்படி இருக்க..? என்ன பண்ற..?" என்றேன்.
"நல்லா இருக்கேண்டா... இப்ப கம்ப்யூட்டர் கோர்ஸ் ஒண்ணு படிச்சிட்டிருக்கேன்... கோர்ஸ் முடிஞ்சதும் அவங்களே வேல வாங்கி குடுத்திடுவாங்க... நீ என்னப் பண்ற...?" - இருவரும் சிறிது நேரம் பேசிவிட்டு அவரவர் வேலையைப் பார்க்க புறப்பட்டோம்.
பிறகு ஓராண்டு கழித்து ஒரு நாள் அந்த நண்பர் என்னைப் பார்க்க வந்தார்.
"எனக்கு கலிபோர்னியாவுல இருக்கிற சாப்ட்வேர் கம்பெனில வேல கிடைச்சிடுச்சி... இரண்டு வருஷத்துக்கு ஒரு முறை தான் இங்க வருவேன்... நாளைக்கு நைட் ப்ளைட்..." என்றார்.
ஐந்தாண்டுகள் ஓடிவிட்டது. இன்று அவர், உலகின் மிகப் பெரிய கணிணி நிறுவனத்தில், உயர்ந்த பதவில், என் ஓராண்டு சம்பளத்தை ஒரு மாத சம்பளமாக வங்கிக் கொண்டிருக்கிறார். எனக்கு அப்போது அந்தத் துறையின் அருமை தெரியவில்லை. இன்று நான் பொருட்களை சந்தை படுத்தும் துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.
வேறு எந்தத் துறையில் இருக்கும் ஒருவர், பத்து ஆண்டுகளில் அடையக் கூடிய வளர்ச்சியை, கணிணி துறையில் இருக்கும் ஒருவர் ஐந்து ஆண்டுகளுக்குள் அடைந்து விடுகிறார். காரணம் கணிணித் துறையில் கிடைக்கும் சம்பளம் போல வேறு எந்தத் துறையிலும் கிடைப்பது இல்லை.
இன்று உலகமே கணிணி மயமாக மாறிக் கொண்டிருக்கிறது. நாம் தேர்ந்தேடுக்கும் துறை தான் நம் எதிர்காலத்தை தீர்மானிக்கும். இந்த சிந்தனையோடு அந்தக் குரல் வந்த திசை நோக்கி சென்றேன்.
அங்கே ஒரு முதியவர் நின்றிருந்தார். எதிரில் முன்று பெண்மணிகள் நின்றிருந்தனர்.
"இருக்கறது மூணு பேரு... இப்டி எல்லாருமே பத்திரிக்கைக்கும், I .A .S. க்கும் போயிட்டா, அப்புறம் யார் தான் கம்ப்யுடர பாத்துக்கறது..? நீ கம்ப்யுடேருக்குப் போமாட்டேன் சொல்றதுக்கு, எனக்கு காரணம் சொல்லு..." என்று நடுவில் நின்றிருந்த பெண்மணியைப் பார்த்து கேட்டார் அந்தப் பெரியவர்.
"முடியில சார்... கொடத்த தூக்கினு மூணு மாடி ஏற முடியல... இடுப்பு உட்டு போவுது... அந்தே பெரிய ஹால குனிஞ்சு நிமுந்து கூட்ட முடியல சார்... பத்திரிக்கையும், I .A.S . சும் கியவே இருக்குது... மாடி ஏறுற வேல இல்லை... இந்த ரெண்டுத்தல ஏதாவது ஒண்ணுல டுட்டி போட்டு குடு சார்..." என்றார் நடுவில் நின்றிருந்த பெண்மணி பாவமாக.
"சரி..., நீ பத்திரிக்கைக்கே போ..." என்று புலம்பிய பெண்மணியை அனுப்பிவைத்தார்.
இந்தாமா... எனக்காக நீ இன்னிக்கு கம்ப்யூட்டர் போ..." என்று அந்த மூவரில் சற்று வயது குறைவாக இருந்த பெண்மணியை பார்த்து சொன்னார். அவரும் அமைதியாகச் சென்றார். முன்றாமவரை I .A .S . சுக்கு அனுப்பிவைத்தார்.
ஆயாக்களுக்கு வேலையை பிரித்து கொடுத்துவிட்டு நிமதியாக நாற்காலியில் அமர்ந்தார் நூலகர்.

Monday, November 22, 2010

சிவப்பு மேகங்கள்
சாம்பல் பூத்த நெருப்பு குவியல்களாய், அந்த சிவப்பு மேகங்கள்;
வானத்தில் இன்று தீ மிதி திருவிழாவோ?
காற்றின் கைவண்ணத்தில் எத்தனை எத்தனை மேக ஓவியங்கள்,
இந்த வான் திரையில்..!
அழியாமல் நிலைத்தது எத்தனை..?
அணு அளவாய் இருந்தது,
பின் ஓர் அடியாய் பிறந்தது,
இன்று ஆறடியாய் மாறிய,
இந்த தேக ஓவியங்களில் நிலைத்தது எத்தனை?
நிலையாமையை உணர்த்தி,
இதோ... அகன்றது நிறம் மாறிய காலை மேகங்கள்.

Wednesday, November 17, 2010

மகான்களின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்கள்

பகவான் ரமணரின் ஆஷ்ரமத்தில், அவருக்கு சேவை செய்து கொண்டிருந்தவர்களில் ஒருவர், அருகில் இருந்த நகரத்தில் ஒரு பெண்ணோடு தொடர்பு வைத்திருந்தார். இது அப்பெண்ணின் உறவினர்களுக்குத் தெரியவந்தது. அந்த ஆசிரமவாசியை பிடித்து கொன்றுவிட திட்டமிட்டனர்.

ஒரு நாள் இரவு, அவனை அப்பெண் வீட்டில் கையும் களவுமாக பிடித்தனர். அவனை கொன்ற பின் உடலை யாருக்கும் தெரியாமல் புதைக்க இடம் வேண்டும்; இடம் கிடைத்த பின் கொள்ளலாம் என்று அவன் கை கால்களை கட்டி ஒரு அறையில் அடைத்து வைத்தனர். அந்த நேரத்தில் ஆசிரமவாசி எப்படியோ அங்கிருந்து தப்பித்து ஆசிரமத்தை நோக்கி விரைந்து ஓடினான். இதை அறிந்து அப்பெண்ணின் உறவினர்களும் துரத்திக் கொண்டு ஓடினர். அவன் ஆசிரம வாயிலுக்குள் நுழைந்ததும் அப்பெண்ணின் உறவினர்கள் அவனை துரத்தவில்லை. ஆசிரமத்திற்குள் நுழைந்த அவன் தேகந்தமும் நடுங்க பகவான் ரமணரின் திருவடிகளில் விழுந்து

என்னை காப்பாற்றுங்கள்..! காப்பாற்றுங்கள்..!' என்று அலறினான்.

பகவான் அருகில் இருந்தவர்களைப் பார்த்து ஆசிரம கதவுகளை முடும் படி உத்தரவிட்டார். அமைதியாக அந்த நபரைப் பார்த்து

பயப்படாதே.! என்ன நடந்தது சொல்..?' என்று கேட்டார்.

தான் ஒரு பெண்ணோடு தொடர்பு வைத்திருந்ததையும்; அது அப்பெண்ணின் உறவினர்களுக்குத் தெரியவந்ததையும்; அவர்கள் தன்னை பிடித்து கொள்வதற்காக கட்டிவைத்ததையும்; தான் தப்பித்து ஆசிரமத்திற்குள் நுழைந்தது வரை சொல்லி முடித்தான்.

எல்லாவற்றையும் கேட்ட பகவான் அவன் நிலையைப் புரிந்து கொண்டார். அவன் மிது பரிதாபப் பட்டவராய் அன்போடு நோக்கி

இனி பயப்பட வேண்டாம்... போய் தூங்கு...என்றார்.

மறுநாள் காலை அந்த ஆசிரமவாசி வழக்கம் போல் பகவானுக்கு தான் செய்யும் சேவைகைளைத் தொடர்ந்தான். பகவானும் நேற்று இரவு அப்படி ஒரு சம்பவம் நடக்காதது போலவே இருந்தார்.

இந்தச் சம்பவம் அந்நகரம் முழுவதும் தெரியவந்தது. அதானால் ஆசிரமத்தில் இருந்த மற்ற ஆசிரமவாசிகள் அந்த நபர் ஆசிரமத்தில் இருப்பதை விரும்பவில்லை. அவன் இனி இங்கு இருந்தால் ஆசிரமத்தின் பெயர் கெட்டுப் போகும் என்று கருதினர். எனவே அவனை ஆசிரமத்தைவிட்டு வெளியே அனுப்பிவிடும் படி பகவானிடம் வேண்டினர்.

பகவான் தவறு செய்த அந்த மனிதரை அழைத்தார். மற்ற ஆசிரமவசிகளின் முன்னிலையில் இவ்வாறு அருளினார்.

நீ ஏதோ ஒரு தவறு செய்துவிட்டாய்... ஆனால் அதை ரகசியமாக வைத்துக்க் கொள்ளத் தெரியாத முட்டாளாய் இருந்து விட்டாய்... மற்றவர்கள் இதை விட கேவலமான தவறுகளை செய்கிறார்கள்... ஆனால் தாம் பிடிபட்டுவிடக் கூடாது என்பதில் கவனாமாக இருக்கிறார்கள்... இப்போது, இன்னும் பிடிபடாதாவர்கள் உன்னை இந்த ஆசிரமத்தைவிட்டு வெளியே அனுப்பும்படி சொல்கிறார்கள்... காரணம் நீ பிடிபட்டு விட்டாய்.., இனி நீ இங்கிருந்தால் உன் வாழ்க்கையை நரகமாக்கி விடுவார்கள்... அதனால் இங்கு நிலைமை சிறாகும் வரை நீ வெளியில் தங்கிக்கொள்... என அருளினார்.

அப்படியே அந்த அசிரமவாசியும் சிறிது மாதம் வெளியில் தங்கி இருந்து விட்டு பிறகு ஆசிரமத்துக்கு வந்து பழையபடி தங்கினார்.

பெரும்பாலானோர் புலன்களின் இன்பத்தில் நாட்டம் உள்ளவர்களே. தகுந்த சந்தர்ப்பம் அமையாதவரை யாவரும் நல்லவரே..! அப்படி அமைந்தும் நெறி தவறாதவர் உத்தமரே.!!

மனிதர்களை நல்லவர்கள் கெட்டவர்கள் என்று அடையாளம் காட்டுவது சந்தர்ப்பங்கள். சந்தர்ப்பங்கள் காலத்தின் வசம் உள்ளது. உயிர் உடலை விட்டு பிரியும் வரை அவரவர் கர்ம பலன்களுக்கு ஏற்றார் போல் காலம் சந்தர்ப்பங்களை வகுத்து வைத்திருக்கின்றது.

தகுந்த சந்தர்ப்பம் அமையும் போது தவறு செய்து விட்டு, பார்ப்பதும் கேட்பதுமே நிஜம் என்று நம்பி வாழும் மனிதர்களுக்குத் தெரியாமல் பல நாள்கள் மறைத்தும் விடலாம். ஆனால் காலம் நிச்சயம் ஒரு நாள் வெளிப்படுத்தியே தீரும். பிடிபடும் காலம் வாய்க்காதவர்களை தான் பகவான் " இன்னும் பிடிபடாதவர்கள்.." என்றார் போலும்.

மறைவில் தவறு செய்து அதை பிறர் அறியாவண்ணம் மறைத்து காத்து கவனத்தோடு நடந்து கொள்பவர்கள், அதே தவறை வேறொருவர் செய்து பிடிபட்டுக் கொண்டால், அவரை காணும் போதெல்லாம் 'நாம் என்றைக்கு பிடிபடோவோமோ' என்ற குற்ற உணர்வால், பிடிபட்டவரை குறை சொல்லி, கேவலப்படுத்தி தன் குற்ற உணர்வை மறைத்துக் கொள்வார்கள் போலும்.

அதனால் தான் குற்றங்களே இல்லாத பகவான் ரமணர், " நீ இங்கு இருந்தால் உன் வாழ்வை நரகமாக்கி விடுவார்கள்" என்று அந்த ஆசிரமவாசியை வெளியே அனுப்பி வைத்தார் போலும்.

சந்நியாச விதிகளை மீறி, ஒருவர் செய்த தவறை மன்னித்து கருணை காட்டிய அந்த மகானின் திருவடிகளைப் பற்றி நம் தவறுகளையும் மன்னிக்க வேண்டுவோம்.

Tuesday, October 26, 2010

ஆகாயம்.

ஆகாயத்திலிருந்து காற்று உருவாகிறது;

காற்றிலிருந்து தீ உருவாகிறது;

தீயிலிருந்து நீர்,

நீரிலிருந்து நிலம்,

நிலத்திலிருந்து உயிர்கள் தோன்றின.

ஆகாயம் எதிலிருந்து உருவானது..?

ஆராய்ந்து தெளிந்தவர்கள்

அந்த ஆகாயமாகவே மாறினர்..!

Wednesday, June 9, 2010

எறும்புகள்

மேஜை மீது இருந்த சில பாத்திரங்களில், அந்தப் பாத்திரத்தைச் சுற்றி, எறும்புகள் சாரை சாரையாக சுற்றி வந்து கொண்டிருந்தன. இனிப்பு இருக்குமிடம் எறும்புக்குத் தெரியும் என்பார்கள். அந்தப் பாத்திரத்திற்குள் இனிப்பு இருந்தது; இறுக்கமாக மூடப்பட்டிருந்தது. நிச்சயமாக இந்த எறும்புகளால் அதற்குள் புக முடியாது. இருந்தும் ஏன் அந்தப் பாத்திரத்தையே சுற்றி வருகின்றன..? இந்த சந்தேகம் நெடு நாள்களாக எனக்கு உண்டு. இன்று அதை இந்த எறும்பிடமே கேட்டுவிடலாம் என்று முடிவு செய்தேன். சுற்றி வந்து கொண்டிருந்த எறும்புகளில் ஒன்றை அழைத்தேன். வந்தது.

நீ எவ்வளவு நேரம் சுற்றி வந்தாலும் உன்னால அந்தப் பாத்திரத்திற்குள் நுழைய முடியாது தெரியுமா...” என்றேன்.

" தெரியும்... " என்றது தீர்க்கமாக

"என்ன தெரியுமா...! அப்புறம் ஏன் அந்தப் பாத்திரத்தையே சுற்றி வந்துகிட்டு இருக்கீங்க..?” என்றேன் வியப்புடன்.

நமக்கு தேவையானது எங்க இருக்குதோ, அங்கியே தான் நாமளும் இருக்கணும். யாராவது வந்து இந்தப் பாத்திரத்தில் உள்ள பொருளை எடுக்கலாம்... அப்போ கொஞ்சம் கீழே சிந்தலாம்... அத நாங்க எடுத்துப்போம்...இல்லை... பாத்திரத்தையே எடுத்துகிட்டு போகலாம்... அப்போ நாங்களும் பின்தொடர்ந்து போவோம். எங்க அதை திறந்து பொருளை எடுக்கிறாங்களோ, அங்க ஏதாவது கீழே சிந்துதான்னு பாத்துகிட்டு இருப்போம்... அப்படியும் இல்லனா... அதை அவங்க சாப்பிடும் போதாவது நிச்சயமா சிந்தும்... அப்போ எடுத்துப்போம்.... அதிர்ஷ்டம் இருந்தா கொஞ்சம் கூடுதலா கிடைக்கும்இதுக்காகத் தான் இங்கேயே சுற்றிக் கொண்டிருக்கிறோம்" என்றது.

ஒரு வேலை அவங்க கொண்டு போற இடத்துக்கு உங்களால போக முடியலனா... அவ்வளவு நேரம் சுத்தி வந்தது வீண் தானே..." என்றேன்.

எப்போதாவது அப்படி நிகழ்வது உண்டு... அப்போதெல்லாம், நாம கொடுத்து வைத்தது அவ்வளவு தான்னு நினைப்போமே ஒழிய..., நேரம் வீணாயிட்டதா நினைக்க மாட்டோம். காரணம், சுற்றி வரும் போது அக்கம் பக்கத்துல நோட்டம் விடுவோம்... அங்க ஏதாவது உணவுப் பொருள் கிடைக்குமான்னு பார்ப்போம்... ஒருவேள, நீங்க சொன்ன மாதிரி, இந்த பாத்திரத்தில் உள்ள உணவு கிடைக்காம போனாலும் கூட .. இந்த உணவைத் தேடி வந்ததால் தானே.. இதோ.. உணவு கிடைக்கக் கூடிய, இந்த புதுப் புது இடங்களை தெரிஞ்சிக்க முடிந்ததுபலன் கிடைக்காவிட்டாலும், வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வதற்காக உழைக்கும் நேரம் எப்போதும் வீணாக போகாது. இப்ப நான் உங்களோட பேசிக்கிட்டு இருக்கிற நேரம் தான் வீண்... சரி நான் போய் சுற்றி வரேன்.." என்று சுறு சுறுப்பாக சென்றது.

கொடுக்க மனம் இல்லாத சில பணக்காரர்களையும், சூழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களின் நோக்கமும், இந்த எறும்புகளைப் போல் தான் இருக்குமோ...!

Friday, June 4, 2010

காடு


பூமித் தாயின் நுரையீரல் காடு,
புற்று நோய்க் கிருமிகளாக நாம்,
அவர் நுரையீரலை அரித்துக் கொண்டிருக்கிறோம்..!
அன்னைக்கு வைத்தியம் பார்ப்பது யார்?

Wednesday, May 26, 2010

வாழ்க்கை

வாழ்க்கையை விரித்துப் பார்க்க, விருப்பம் வேண்டும்;

விருப்பம் விதை போன்றது.

விதையை, மனதில் புதைத்து வைக்க வேண்டும்.

அது செழித்து வளர,

முறையாக ஊக்கம் என்ற நீரை உற்றி வர வேண்டும்.

காலம் சிலருக்கே தண்ணீர் தருகிறது..!

நம்மில் பல பேர் புதைப்பவர்களாக மட்டுமே இருக்கிறோம்;

தண்ணீர் பஞ்சத்தால்,

விதை வளர்வதற்குள் புதைந்தும் போகிறோம்..!

Thursday, May 20, 2010

யோசிக்க வைத்தவை

பெய்ய வேண்டிய நேரத்தில் நிறைவாக பெய்யிவதில்லை! கத்திரி வெயில், கன மழை பெய்து கொண்டிருக்கிறது. பலத்த காற்று வேறு. மழைக் காலத்தில் வாழ்வது போன்ற உணர்வு! ஒரே நாளில் பருவகாலத்தையே மாற்றிக் காட்டிவிட்டதே இந்த இயற்கை!

இதோ இந்த மழை யாருக்கோ அதிர்ஷ்டமாகவும், யாருக்கோ துர்திர்ஷ்டமாகவும் நிச்சியம் அமைந்திருக்கும்.

எண்ணங்கள் செயல் வடிவம் பெற முயற்சி தேவை; திட்டமிட்ட படி அவை நிறைவேற தெய்வத்தின் அருள் தேவை. வெய்யிலை மனதில் வைத்துக் கொண்டு தங்கள் செயல்களை திட்டமிட்டவர்கள் நிலை என்னவாகும்?

"ச்சே...! இந்த மழை வந்து எல்லாத்தையும் கெடுத்து குட்டிச் சுவராக்கிடுச்சு....!" என்று சிலரும்,

"ஒருவேளை இந்த மழை வரலன்ன... இந்நேரம் இந்த வேலை முடிந்திருக்கும்... ப்ச்! போகட்டும் கடவுள் நமக்கு நல்லதை தான் செய்வார்... இதுவும் நல்லதுக்குத் தான்..." என்று சிலரும் நொந்து கொண்டிருப்பார்கள்.

இருவருமே மழையை நொந்து கொள்கிறார்கள்; ஆனால் விதம் வேறு.

ஆணவத்தோடும், அகங்காரத்தொடும், செயலைத் தொடங்கியவர்களுக்கு இந்த மழை தண்டனையாக அமைந்திருக்கும்; ஆண்டவன் ஆசியோடும், நல்ல எண்ணத்தோடும் செயலைத் தொடங்கியவர்களுக்கு இந்த மழை ஆசிர்வாதமாக அமைந்திருக்கும்.

நமக்கு மீறிய சக்தி ஒன்று உண்டு; அதை நமக்கு நன்மையாகவும் தீமையாகவும் அமைத்துக் கொள்வது, நம் கையில் தான் இருக்கிறது. 'நான்' என்ற அகங்காரத்தோடு வாழும் வரை, அது நமக்கு தீய சக்தி; அடக்கத்தோடும், அன்போடும் வாழும் வரை, அது நமக்கு நன்மை செய்யும் சக்தி.

நாம் நம் நிகழ் காலத்தை கருத்தில் கொண்டு எதிர்காலத்தை திட்டமிடுகிறோம்; நம் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு நிகழ் காலத்தை அமைத்துக் கொடுக்கிறார் கடவுள். அகங்காரம் இருக்கும் வரை இந்த சூட்சமம் புரிவதில்லை. அகங்காரம் இருக்கும் வரை ஆசைகளுக்காக செயல்கள் செய்து கொண்டிருப்போம்; ஆண்டவன் சிந்தனை இருக்கும் வரை கடமைக்காக செயல்கள் செய்து கொண்டிருப்போம்.

என் சிறிய அறிவுக்கு வேண்டுமானால், இந்த மழை, காலம் தப்பி பெய்வதாக இருக்கலாம்; ஆனால் அந்தப் பேரறிவுக்கு இது முறையானதே!