Monday, September 14, 2015

யோசிக்க வைத்தவை

காலைப் பொழுது. சுருசுருப்பு, சூரியனைப் போல் மெதுவாக உதித்துக் கொண்டிருந்தது.
படுக்கையிலிருந்து எழுந்த்த்தும், தொலைக்காட்சியில் ஆன்மீக நிகழ்ச்சிகளைப் பார்ப்பது வழக்கம். அது ஒரு ஆன்மீக வினா விடை நிகழ்ச்சி.
வினா : “ நான் தினமும் என் வீட்டில் சுவாமி திருவுருவத்திற்கும், குருவின் திருவுருவத்திற்கும் முன், தீபம் ஏற்றி வருகிறேன். நாங்கள் வெளியூருக்குச் செல்லும் போது சுவாமிக்கும், குருவின் திருவுருவத்திற்கும் தீபம் ஏற்ற முடியாமல் போகிறது. இது தவறா, எதாவது பரிகாரம் உள்ளதா..?”
விடை : “ இந்த மாதிரி வெளியூர் போற சமயத்துல… சுவாமி திருவுருவப் படத்துக்கு முன்னால, குரு திருவுருவப் படத்துக்கு முன்னால, குளிர்ந்த தீபம் ஏத்தி வச்சுட்டு போகனும்னு சொல்லுவா. நாம ஊருக்குப் போயிட்டு வர்ற வரைக்கும் அங்க சுக்ஷும ருபத்துல தீபம் எரிஞ்சுண்டு இருக்கிறதா ஐதீகம்.
குளிர்ந்த தீபம் அப்படின்னா என்ன..? நாம வழக்கமா பயன்படுத்துற விளக்க, சுத்தம் செய்து அதுல நிறைய எண்ணைய விட்டு, திரி போட்டு தீபம் எத்தி, அப்படியே விட்டிடனும். ஒரு கிண்ணத்துல துவரம் பருப்பும், ஒரு கிண்ணத்துல அரிசியும் போட்டு சுவாமி கிட்ட, குரு கிட்ட, வச்சிட்டு வீட்ட பூட்டிண்டு ஊருக்குப் போயிடனும். இதுக்குப் பேரு தான் குளிர்ந்த தீபம்.
நாம ஊருக்குப் போயிட்டு வர்ர வரைக்கும் சுவாமிக்கு ஆகாரம் வேணுமோயில்லியோ அதுக்குத் தான் துவரம் பருப்பும் அரிசியும். ஏன் துவரம் பருப்புத் தான் வெக்கனும்மா வேற பருப்பு வெக்கக் கூடாதா நீங்க கேக்கலாம். துவரம் பருப்பு வைக்கும் போது சம்பூரணம் ஆகறதுன்னு வேதத்தில சொல்லிருக்கு. ஆந்திராவுல பாத்திங்கன்னா தானம் கொடுக்கும் போது துவரம் பருப்ப தான் கொடுப்பா... ஏன்னா அப்ப அந்த தானம் சம்பூர்ணமாகுது.
நம்ம சென்னையில நடந்த ஒரு அதிசயத்த உதாரணமா சொல்லலாம். ஒருத்தர் சென்னையில வசிச்ண்டிருந்தார். அவருக்கு காஞ்சி மகாப் பெரியவா மேல ரொம்ப பக்தி. மகாப் பெரியவா சென்னையில த்ங்கியிருந்த காலத்துல... தெனமும் போய் தரிசனம் பண்ணுவார். அவர் ஒரு முற வெளியூர் போக வேண்டியிருந்தது. அப்ப என்ன பண்ணார்னா... அவர் வீட்ல இருந்த காஞ்சி மகாப் பெரியவா படத்துக்கு முன்னால தீபம் ஏத்தி வச்சுட்டு,
“சுவாமி நான் ஊருக்குப் போறேன். வர்ரதுக்கு ஒரு மாசம் ஆகும். என்னால தீபம் ஏத்த முடியாது. சுவாமி..! நீங்க என்ன மன்னிக்கனும். நீங்க தான் என் வீட்ட பாதுகாக்கனும்; சொத்தப் பாதுகாக்கனும்; உங்கள நம்பித் தான் விட்டிட்டுப் போறேன்”னு மனசார பிரார்த்தன செஞ்சுண்டார். ஊருக்கு கிள்ம்பிட்டார்.
சொத்துன்னா.., அசையும் சொத்து, அசையா சொத்து, ரெண்டுந்தான்... நம்ம கொழந்தைகள் கூட அசையும் சொத்து தான்.
ஊருக்குப் போனவர் ஒரு மாசம் கழிச்சு வீட்டுக்கு வந்தார். வீட்டு வாசல்ல நிறைய போலீஸ் நின்னின்டிருக்கு. விசாரிச்சதுல, இராத்திரி வீட்டுக்குத் திருடன் வந்ததாகவும்; பூட்ட உடைச்சு உள்ள போன போது, வீட்டுக்குள்ள ஒரு பெரியவர், கையில குச்சி வச்சிக்கிட்டு “திருடாதன்னு” மிரட்டியதாகவும்; இவன் மீறி திருட போன போது, கண் பார்வைய இழந்திட்டதாகவும், தான் செய்த த்ப்புக்கு மன்னிப்பு கேட்பதற்காக வெளியே வந்து அக்கம் பக்கத்துல சொல்லி போலீஸ வர வெச்சதாகவும் தெரிஞ்சுண்டார்.
தான் பூட்ட உடைக்கும் போது உள்ள யாருமில்ல, ஆனா அந்த பெரியவர் எப்படி உள்ளே வந்தார்னு தெரியலன்னு சொல்லி, அவன் பெரியவர் உட்கார்ந்திருந்த இடத்தை விவரித்த் போது, அங்கு தான் ஸ்ரீ காஞ்சி மகாப் பெரியவா திருவுருவப் படம் இருந்தது, அவன் விவரித்த் உருவ அடையாளங்கள் மகாப் பெரியவாளையே உணர்த்தியது.
இவருக்கு கண்ணல ஜலமா கொட்ட ஆரம்பிச்சது, நேர காஞ்சி மடத்துக்குப் போறார்; பெரியவாள தரிசன்ம் பண்ணறார்;. தீர்த்தம் வங்கறதுக்கு வரிசையில் நின்னுடிருக்கார்; இவர் முறை வர்றது; தீர்த்தம் வர்ங்கறச்சே பெரியவா சிரிச்சுண்டே கேக்கறார்,
“என்னடா திருடன் வந்தானா... நீ பாட்டுக்கு என்ன பாதுகாக்க சொல்லிட்டு போயிட்ட...” என்று சொல்லும் போதே அவர் பாத்துல விழுந்து வணங்கினார்.
அது போல ஊருக்குப் போரோமே, சுவாமிக்கும், குருவுக்கும், தீபம் ஏத்த முடியாதேன்னுலாம் வருத்தம் வேண்டாம்... இந்த குளிர்ந்த தீபம் ஏத்தி வச்சிட்டு மனசார வேண்டிண்டு போலாம் தப்பில்லே... தெய்வமும், குருவும் பாதுகாப்பா… “
நிகழ்ச்சி முடிந்த்து
நான் கூட, ஒரு நோய்வாய்ப்பட்ட அசையும் சொத்தை, பாதுகாக்கச் சொல்லி பகவான் ஸ்ரீ ராகவேந்திரர் கிட்ட ஒப்படைச்சேன். பட்டப் பகல்ல, எல்லாரும் இருக்கும் போதே, எமன் வந்து கொண்டுபோயிட்டார். பூஜையறையில அவரும் இருந்தார்.. “எடுக்காதே..!”னு, எமனிடம் ஏன் அவர் உத்தரவு போடவில்லை..?
மனம் சோர்ந்து போனது; விரக்தியாக இருந்த்து; ஆழ்மனதிலிருந்த துக்கங்கள் பொங்கிக் கொண்டிருந்தது; என்னால் தாங்க முடியவில்லை; மனம் குலைந்து போனது; சமாதானம் தேடியது; உட்கார்ந்த இடத்திலிருந்து அசைய முடியவில்லை; சறுக்கும் நிலத்தில் ஊன்றுகோல் போன்றது சான்றோர் வாய்ச் சொற்கள். அப்படி ஒரு வாசகத்தை, மனம், பொங்கிக் கொண்டிருந்த பழய பதிவுகளிலிருந்து பிடித்துக் கொண்டது.
‘… அந்த ராகவேந்தர் உனக்கு நல்லதுதான் செய்வார்…”னு, ஒரு முக்கியமான சந்தர்பத்துல, எப்போதோ என் அம்மாவின் அம்மா என்னிடம் சொன்னது.
மூச்சுத் திணறலிருந்து மீண்டது போல இருந்தது.
தெய்வ நம்பிக்கை, நாற்காலியிலிருந்து இருந்து என்னை மெல்ல எழச் செய்த்து; வழக்கமான வேலைகளை துவங்க ஆரம்பித்தேன்.

2 comments:

  1. மதிப்பிற்குரிய நரேந்திர பாரதி அவர்களுக்கு,

    வருகைக்கு நன்றி..! தங்கள் பாராட்டு ஊக்கமளிக்கிறது, நன்றி..!

    ReplyDelete