யோகம்-கவிதை

சூரிய நமஸ்காரம்: யோகாவில் அதன் அற்புத நன்மைகள்

அறிமுகம்



யோகா பயிற்சியில் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு பயிற்சி முறையே சூரிய நமஸ்காரம். இது 12 வெவ்வேறு ஆசனங்களை ஒன்றன் பின் ஒன்றாக இணைத்து செய்யும் ஒரு தொடர் பயிற்சியாகும். "சூரிய நமஸ்காரம்" என்றால் "சூரியனுக்கு வணக்கம்" என்று பொருள். பண்டைய காலம் முதலே இந்திய மரபில் சூரியனை ஆற்றலின் ஆதாரமாகவும், உயிர்களின் மூலமாகவும் வணங்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்த பயிற்சியை தினமும் காலையில் செய்வதன் மூலம் உடல், மனம் மற்றும் ஆன்மீக ரீதியில் ஏராளமான நன்மைகளை பெறலாம்.

1. முழு உடல் பயிற்சி

சூரிய நமஸ்காரம் ஒரு "cardio" பயிற்சி போலவே செயல்படுகிறது. இது தசைகள், மூட்டுகள், முதுகெலும்பு ஆகிய அனைத்தையும் ஒரே நேரத்தில் இயக்கி, முழு உடலுக்கும் பயிற்சி அளிக்கிறது. தொடர்ந்து பழகினால் உடல் நலம் சிறக்கும்.

2. எடை குறைப்புக்கு உதவுகிறது

உடல் பருமனுக்கு இது ஒரு மருந்து. வேகமாக செய்யும்போது இது இதயத் துடிப்பை அதிகரித்து, கலோரிகளை எரிக்க உதவுகிறது. தொடர்ந்து பயிற்சி செய்வதால் உடல் பருமன் கட்டுப்பாட்டில் வைக்கப்படுகிறது. 

3. செரிமான மண்டலம் மேம்படுகிறது

வளைவு மற்றும் நீட்சி நிலைகள் வயிற்று உறுப்புகளை தூண்டி, செரிமான சக்தியை அதிகரிக்கின்றன. மல சிக்கல் மன சிக்கலுக்கு காரணம். இது மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளையும் குறைக்க உதவும். மன மகிழ்ச்சி நிலைக்கும்.

4. இரத்த ஓட்டம் சீராகிறது

உடலின் பல்வேறு பாகங்களுக்கு இரத்த ஓட்டம் சீராக பாய்வதால், சருமம் ஒளி பெறுகிறது மற்றும் உடல் உறுப்புகள் சரியாக செயல்படுகின்றன. உடல் உறுப்புகள் பலம் பெறுகின்றன.

5. நெகிழ்வுத்தன்மை அதிகரிக்கிறது

நம் உடலின் முதுகெலும்பு, தோள்பட்டை, இடுப்பு போன்ற பகுதிகளின் நெகிழ்வுத்தன்மை (flexibility) மேம்படுகிறது.

6. ஹார்மோன் சமநிலை

பெண்களுக்கு மாதவிடாய் தொடர்பான பிரச்சினைகளை சீராக்கவும், ஹார்மோன் சமநிலையை பராமரிக்கவும் இது உதவுகிறது. இதனால் பெண்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம்.

மன ரீதியான நன்மைகள்

1. மன அழுத்தம் குறைகிறது

நம் மூச்சும் மனமும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. சுவாசத்துடன் இணைந்த இயக்கங்கள் மனதை அமைதிப்படுத்தி, மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைக்க உதவுகின்றன.

2. கவனம், ஊக்கம் மற்றும் நினைவாற்றல் மேம்பாடு

காலையில் செய்யும் இந்த பயிற்சி மூளைக்கு தேவையான ஆக்ஸிஜனை வழங்கி, கவனம் செலுத்தும் திறனையும் நினைவாற்றலையும் அதிகரிக்கிறது. 

தினமும் சூரிய உதயத்தை வணங்கி செய்யும் இந்த பயிற்சி, நம்மை நாள் முழுவதும் உற்சாகமாக வைத்திருக்க  உதவுகிறது.

ஆன்மீக நன்மைகள்

சூரிய நமஸ்காரம் வெறும் உடற்பயிற்சி மட்டுமல்ல, இது ஒரு தியானம் மற்றும் ஆன்மீக பயிற்சியும் ஆகும். சூரியனை வணங்குவதன் மூலம் இயற்கையுடன் இணைந்த உணர்வு ஏற்படுகிறது. மந்திரங்களுடன் இணைந்து செய்யும்போது, இது தியானத்தின் ஒரு வடிவமாகவும் செயல்படுகிறது.

சூரிய நமஸ்காரம் செய்யும்போது நீங்கள் கவனிக்க வேண்டியவை

காலியான வயிற்றில், காலையில் செய்வது சிறந்தது

சுவாசத்துடன் இயக்கங்களை இணைத்து செய்ய வேண்டும்

ஆரம்பத்தில் மெதுவாக, படிப்படியாக வேகத்தை அதிகரிக்கலாம்

முதுகுவலி, உயர் இரத்த அழுத்தம், கர்ப்பம் போன்ற உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் மருத்துவர் அல்லது யோகா ஆசிரியரின் ஆலோசனையுடன் மட்டுமே செய்ய வேண்டும்

சூரிய நமஸ்காரம் என்பது உடல், மனம் மற்றும் ஆன்மா ஆகிய மூன்றையும் ஒன்றிணைக்கும் ஒரு முழுமையான பயிற்சி முறை. தினமும் காலையில் சில நிமிடங்கள் ஒதுக்கி இதைச் செய்வதன் மூலம், ஆரோக்கியமான உடல், அமைதியான மனம் மற்றும் நேர்மறையான வாழ்க்கை முறையை பெறலாம். உங்கள் யோகா ஆசிரியர் வழிகாட்டுதலோடு இன்றே தொடங்குங்கள், சூரிய நமஸ்காரத்தின் மகத்துவத்தை உணருங்கள்!


******************************************

நன்றியுணர்வு எப்படி பணத்தை ஈர்க்கும்?

ஏற்கனவே நம்மிடம் இருக்கும் ஒன்றிற்காக கடவுளுக்கு நன்றி சொல்லும் போது மனதில் நிறைவு உண்டாகிறது; நிறைவு மகிழ்ச்சியை உண்டாக்குகிறது; மகிழ்ச்சி தான் பிரபஞ்சத்திற்கு தெரிந்த மொழி. மகிழ்ச்சி என்ற மொழி மூலமாகத் தான் பிரபஞ்சத்திடம் நாம் விரும்பியதை கேட்டு பெற முடியும். ஆகவே நம்மிடம் இருக்கும் ஒவ்வொன்றிக்காகவும் இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும். 

நாள் முழுவதும் நாம் எதைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறோமோ அது தான் நம் வாழ்வில் விரிவடைகிறது. இது ஓர் அறிவியல் உண்மை. குறை, கவலை, வறுமை, இல்லாமை பற்றி நாள் முழுவதும் நினைத்துக் கொண்டு இருந்தால், பற்றாக் குறை தான் வாழ்வில் விரிவடையும். மாறாக நம்மிடம் இருப்பதைப் பற்றி நினைத்துக் கொண்டு இருந்தால் வளமை, வசதி விரிவடையும்.

பணமில்லை, வாய்ப்பில்லை, உதவுவாரில்லை என்று நாள் முழுவதும் நினைத்துக் கொண்டே இருந்தால் "இல்லாமை" உணர்வே வலுப்பெறும். மனமும் குறை பட்டுக்கொண்டு இருக்கும் மனமாக மாறும். வெளியுலகில் குறையை பார்க்கும் மனமாக மாறும். மாறாக இறைவன் எனக்கு எப்போதும் துணையாக இருக்கிறான், நன்றி இறைவா!; இந்த வேளை உணவு இருக்கிறது, நன்றி இறைவா!; இப்போது என் உடல் நலம் நன்றாக இருக்கிறது, நன்றி இறைவா! என்று இருப்பதற்கு நன்றி சொல்லும் போது மனம் வளமையை கவனிக்கிறது. வெளியுலகில் வளமையான வாய்ப்புகளைக் காட்டும் மனமாக மாறும். 

குறையுள்ள மனம் பயத்தையும் கவலையையும் உண்டாக்கும். இதனால் நல்ல வாய்ப்புகள் கண் முன்னே இருந்தாலும் பயத்தால் கவலையால் அவற்றை பயன்படுத்திக் கொள்ளாமல் விட்டுவிடுவோம். நன்றியுணர்வு மனதை அமைதியாக்குகிறது. அமைதியான மனம் தெளிவான முடிவுகள் எடுக்கும். கிடைக்கும் வாய்ப்புகளை நன்றாக புத்திசாலித் தனமாக பயன்படுத்தும்.

நன்றியுணர்வு என்பது ஒரு செயலற்ற உணர்வு அல்ல; அது செயல் செய்யத் தூண்டும் உணர்வு. எப்படி? நம்மிடம் உள்ள ஒரு பொருளையோ, அன்பான உறவையோ நினைக்கும் போது உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கும். அந்த மகிழ்ச்சியை நண்பர்களோடு, உறவினர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வரும். அவர்களுக்குப் பிடித்த இனிப்போ பொருளோ வாங்கிக் கொடுக்க வேண்டும் என்ற செயலில் ஈடுபடுவீர்கள். இதனால் அவர்களுக்கும் உங்களுக்கும் இருந்த நட்பு, உறவு வலுப்படும். அவர்கள் மூலமாக நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

தினமும் காலை மற்றும் மாலை உங்களிடம் உள்ள மூன்று விடயங்களுக்கு நன்றி சொல்லுங்கள். உங்களின் சிறு வெற்றியைக் கூட நண்பர்கள், உறவினர்களோடு கொண்டாடுங்கள். மற்றவர்களுக்கு கொடுப்பதில் மகிழ்ச்சி காணுங்கள்.

பணத்தை ஈர்க்க விடாமுயற்சி, உழைப்பு, சரியான திட்டம், சரியான முடிவு தேவை. இதற்கு அமைதியான மனநிலை வேண்டும். நன்றி உணர்வு அத்தகைய மன நிலையைக் கொடுக்கும். 



******************†********************

யானையின் சரணாகதி தத்துவம்.

நாம் விரும்பியதை அடைய நம் அறிவு கொண்டு முயல்கிறோம். உதவிக்கு உற்றார் உறவினர்களை அழைக்கிறோம். அப்படி முயன்றும் நம் விருப்பத்தை அடைய முடியாத போது இறைவனிடம் முறையிடுகின்றோம். அது அல்ல சரணாகதி. 
நம் முயற்சியை துவங்குவதற்கு முன்பே இறைவனிடம் "இறைவா! நான் உன்னை முழுமையாக நம்பி இந்த முயற்சியை  மேற்கொள்கிறேன். நீயே எனக்கு வெற்றி தேடித் தர வேண்டும். உன் திருவடிகளை சரணடைகிறேன். என்னை காப்பாற்று!" என்று சரணடைந்து முயல வேண்டும். அதே போல துன்பம் வந்த போதும் முதலில் இறைவனை சரணடைந்து பின் அதை நீக்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.
இந்த சரணாகதி தத்துவத்தை  விளக்கும் ஒரு கதையைப் பார்ப்போம்.

கஜேந்திர மோட்சம்
திரிகூட மலையில் ஓர் அழகிய தடாகம் இருந்தது. அங்கு யானைகளின் அரசன் கஜேந்திரன் என்ற யானை தன் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தது. ஒரு நாள் தடாகத்தில் இறங்கி நீர் குடித்துக் கொண்டு இருந்தது. அப்போது தீடிரென ஒரு முதலை யானையின் காலை காவிக் கொண்டது. 

யானை எவ்வளவோ முயன்றும் முதலையின் பிடியிலிருந்து விடுபட முடியவில்லை. இந்த முயற்சி ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்ததாக புராணத்தில் சொல்லப் படுகிறது. அருகில் இருந்த யானைகளால் உதவ முடியவில்லை. கஜேந்திர யானையின் அறிவு பலம் எதுவும் முதலையிடம் செல்ல வில்லை.

தன் முயற்சி செல்லாது என்று உணர்ந்த யானை அந்த தடாகத்தில் இருந்த ஒரு தாமரை மலரை தன் துதிக்கையால் பறித்து சரணாகதி மனதோடு "ஆதிமூலமே" என்று ஶ்ரீ மகாவிஷ்ணுவை அழைத்தது. முதலையிடம் இருந்து தன்னை அவரால் மட்டுமே காப்பாற்ற முடியும் என்று நம்பியது. 

அந்த நொடியே ஶ்ரீ விஷ்ணு கருட வாகனத்தில் வந்து இறங்கினார். தன் சக்ராயுதத்தால் முதலையை அழித்து யானையை மீட்டார். யானைக்கு மோட்சம் அளித்தார்.

நாம் அந்த யானையைப் போல் இல்லாமல் துன்பம் வந்த உடன் முதலில் இறைவனை சரணடைவோம். வாழ்வில் மகிழ்ச்சியை அடைவோம்.


†******************************†********

உணர்வும், உடல் திறனும் வேறு! மன அழுத்தத்தை வெல்வது எப்படி?

நம் உடலுக்கும் மனதிற்கும்  தொடர்பு உண்டு. மகிழ்ச்சி, சோகம் போன்ற மன உணர்வுகள் நம் உடலில் வெளிப்படுவது இயல்பே. அதே போல் உடல் சோர்வும் நம் உடலில் வெளிப்படும். இந்த இரண்டின் வேறுபாட்டை அடையாளம் கண்டு கொண்டால் நாம் குழப்பம் இன்றி வாழலாம். 
மனதில் உண்டாகும் ஒவ்வொரு உணர்வுக்கும், உடலில் ஒவ்வொரு அறிகுறி தென்படும். எடுத்துக் காட்டாக, மனதில் மகிழ்ச்சி உணர்வு ஏற்படும் போது உடல் லேசாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும். சோக உணர்வு ஏற்படும் போது தொண்டையில் அடைப்பு, மார்பில் கணம், உடலில் சோர்வு ஏற்படும். கவலை பதற்றம் ஏற்படும் போது இதய துடிப்பு உயர்வது, மார்பில் இறுக்கம், வயிற்றில் இறுக்கம், உண்டாகும். கோபம் உண்டாகும் போது மூச்சு ஓட்டம் வேகமாதல், தசை இறுக்கமாதல், முகம் சூடாதல் உண்டாகும்.
உடலில் ஏற்படும் இந்த உணர்வுகளை கண்டு பிடித்து சரியாக பெயரிடத் தெரிந்தாலே மனச் சோர்வு எது? உடல் சோர்வு எது? என்பதை தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.

மனச் சோர்வின் அறிகுறிகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம். மனச்சோர்வு என்பது தற்காலிகமான சோகம் இல்லை. இது தொடர்ச்சியாக இரண்டு வாரங்களுக்கு மேல் நீடிக்கும் நிலை. மனச்சோர்வின் உணர்ச்சி ரீதியான அறிகுறிகள் என்ன என்பதை பார்ப்போம். தொடர்ச்சியான வெறுமை உணர்வு அல்லது சோகம்;
முன்பு விருப்பமாக இருந்த செயல்களில் ஆர்வமின்மை; நம்பிக்கையின்மை, குற்ற உணர்வு   போன்றவை ஆகும்.

எண்ணங்கள் ரீதியான அறிகுறிகள் என்ன என்பதை பார்ப்போம். 
கவனம் செலுத்த முடியாமை;
முடிவெடுக்க சிரமம்;
தன்னைக் குறைத்து மதிப்பிடுதல்; போன்றவை ஆகும்.
மனச்சோர்வு உடல்ரீதியான உண்டாகும் அறிகுறிகள்,
தொடர்ச்சியான சோர்வு (எவ்வளவு ஓய்வெடுத்தாலும் குறையாதது);
தூக்கத்தில் மாற்றம் (அதிகமாக அல்லது குறைவாக தூங்குதல்);
பசியில் மாற்றம், எடை மாறுதல்
உடலின் பல பகுதிகளில் காரணமில்லாத வலி போன்றவை ஆகும். 

நாம் காலையில் எழுந்ததும் அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடாமல் உடல் சுறுசுறுப் இன்றி மந்தமாக இருந்தால் இதற்கு காரணம் மனச்சோர்வா உடல் சோர்வா என்பதை கண்டு பிடிக்க சில யோசனைகள். சில கேள்விகளை உங்களுக்கு நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.
நேற்று வெயிலில் நீண்ட நேரம் அலைந்ததால் இன்று தூங்கி எழுந்ததும் மந்தமாக உணர்கிறோமா? நேற்று உண்ட உணவு நன்றாக செரிமானம் ஆகவில்லையா? நேற்று நடு இரவுக்கு மேல் தூங்கியதால் இந்த நிலையா? இக்கேள்விகளுக்கு ஆம் என்று பதில் வந்தால் இது உடல் சோர்வு மனச் சோர்வு அல்ல
 சில மணி நேரத்தில் சரியாகும் மனநிலையில் பெரிய மாற்றம் இருக்காது. அன்றாட நடவடிக்கைகளை பாதிக்காது. 

மாறாக கீழே உள்ள கேள்விகளுக்கு என்ன பதில் வருகிறது என்று பாருங்கள்.
இந்த உணர்வு எத்தனை நாட்களாக இருக்கிறது இரண்டு வாரங்களுக்கு மேலாகவா?; இதனுடன் தொடர்ச்சியான சோகம், வெறுமை, அல்லது நம்பிக்கையின்மை உணர்வு சேர்ந்து வருகிறதா? முன்பு மகிழ்ச்சி தந்த விஷயங்களில் இப்போது ஆர்வம் இருக்கிறதா? இது என் அன்றாட வேலைகளையும் உறவுகளையும் பாதிக்கிறதா?இக்கேள்விகளுக்கு ஆம் என்று பதில் வந்தால் இது மனச் சோர்வு உடல் சோர்வு அல்ல. இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

சில சமயங்களில் உடல் சோர்வை மனச் சோர்வாகக் கருதிக்கொண்டு நம்மை அறியாமலே அந்த நாளை வீணாக்கி விடுவோம். உடல் சோர்வு மனச் சோர்வு இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை அடையாளம் கண்டு கொண்டால் எல்லா நாளும் மகிழ்ச்சியான நாட்களே!



******************************************

யோகப் பயிற்சி எதற்காக?

நம் வாழ்வின் நோக்கம் நிறைவடைய யோகா எவ்வாறு உதவுகிறது. மனித வாழ்க்கை என்பது வெந்ததை தின்று விதி வந்தால் போவோம் என்பது மட்டுமல்ல. தன்னை அறிய வேண்டும். தன்னை அறிதல் என்றால் என்ன? 

"நான்" என்று நாம் நம்மை சுட்டி காட்டுகிறோம். அந்த "நான்" எதை சுட்டுகிறது? உடலையா? உடல் என்றால், பிறந்தது முதல் உடல் வளர்ந்து கொண்டே இருக்கிறது, மாறிக் கொண்டே இருக்கிறது. ஆனால் "நான்" என்ற உணர்வு மாறுவது இல்லை. பத்து வயதில் "நான்" என்று சொல்லும் போது என்ன உணர்வு இருந்ததோ அதே உணர்வு முப்பது வயதில் "நான்" என்று சொல்லும் போதும் இருக்கின்றது. மாறவில்லை. அப்படியானால் "நான்" என்பது, மாறிக் கொண்டே இருக்கும் உடலைக் குறிக்கவில்லை. 
"நான்" என்பது மனதைக் குறிக்கிறதா? உடலைப் போலவே மனமும் மாறிக்கொண்டே இருக்கிறது. பத்து வயதில் இருந்த மனம் முப்பது வயதில் இல்லை. அதனால் "நான்"என்பது மனதைக் குறிக்க வில்லை. 

பிறந்தது முதல் இறக்கும் வரை மாறாமல் இருப்பது உயிர் அல்லது ஆன்மா,  மட்டுமே! நீங்கள் பத்து வயதில் "நான்" என்று குறிப்பிட்டது உங்கள் உயிரை. முப்பது வயதில் "நான்" என்று குறிப்பிடுவதும் அதே உயிரைத் தான். எனவே "நான்" என்பது உடலோ மனமோ அல்ல, "நான்" என்பது உயிர் அல்லது ஆன்மா ஆகும். மாறாத, என்றும் உள்ளதுமான இந்த ஆன்மாவை உணர்வதே வாழ்வின் நோக்கமாகும். இது தான் தன்னை அறிதல் ஆகும். 

மனிதன் தன்னை அறிவதற்காக நம் முன்னோர்களால் வடிவமைக்கப் பட்ட தொழில் நுட்பம் தான் யோகப் பயிற்சி ஆகும். யோகாவில் எட்டு அங்கங்கள் அல்லது பகுதிகள் உள்ளன. அவை முறையே யமம் - செய்யக் கூடாதவை; 
நியமம் - செய்ய வேண்டியவை; 
ஆசனம் - உடலின் அமர்வு நிலைகள்; 
பிராணாயாமம் - மூச்சுப் பயிற்சி; 
பிரித்யாகாரம் - புலன்களை அல்லது மனதை வெளி உலகில் இருந்து உள்முகமாகத் திருப்புதல்;
தாரணை - மனதை ஒரு எண்ணம் அல்லது ஒரு பொருளில் நிலைநிறுத்தும் பயிற்சி; 
தியானம் - மனதை ஒரு எண்ணம் அல்லது ஒரு பொருளில் லயிக்க வைத்தல்; 
சமாதி - தானும், தியானிக்கப் படும் பொருளும், வேறல்ல ஒன்றே என்று உணரும் நிலை.

இவற்றில் யமம் மற்றும் நியமம் நாம் வெளி உலக நடவடிக்கைகளையும் உள் மனநிலையையும் ஆன்மீக வளர்ச்சிக்கு ஏற்றார் போல் மாற்றி அமைக்கிறது.
ஆசனம் பிராணாயாமம் உடலையும் மூச்சையும் தியானத்திற்கு ஏற்றார் போல் மாற்றி அமைக்கிறது.
பிரத்தியாகாரம், தாரணை, தியானம்,  மனதை வெளி உலகில் இருந்து திருப்பி உள்முகமாக லயிக்கச் செய்கிறது. 
சமாதியில் தனிமனித உணர்வு கரைந்து உண்மை நிலை உணர்வு கிட்டுகிறது.

யோகா பழகி நம் வாழ்வின் நோக்கத்தை அடைவோம். 





**************************************************

பணம் ஈர்க்கும் வழி!

நம் வருமானம் ஏதோ ஒரு மனிதரிடம் இருந்தான் வருகின்றது. நாம் செய்யும் செலவும் ஏதோ ஒரு மனிதரிடம் செல்கின்றது. ஆக பணத்தின் இருப்பிடம் மனிதர்கள் தான். மனிதர்கள் கூடும் இடத்தில் இருப்பதும்,  பணத்தோடு இருப்பதும் ஒன்றே! 

பிறந்த எல்லா மனிதர்களுக்குள்ளும் 64 கலைகளில் ஒன்று உறுதியாக இருக்கும். உங்களுக்குள் இருக்கும் கலையைக் கண்டுபிடியுங்கள். 
உங்களுக்குள் இருக்கும் கலையை வளர்த்தெடுக்கும் வேலையில் முழுமையாக ஈடுபடுங்கள். அந்தக் கலை தொடர்பான அமைப்புகள், விழாக்கள், இவற்றில் தவறாது பங்கெடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் கலையை மற்றவரோடு பகிர்ந்து கொள்ளுங்கள். பணத்தை ஈர்க்கும் வழி இது தான்!

சமுதாயத்தின் தேவைகள் என்ன சிக்கல்கள் என்ன என்பதை கூர்ந்து கவனியுங்கள். உங்கள் கலை சமுதாயத்தின் தேவைகளை எவ்வாறு நிறைவு செய்யும்,  சிக்கல்களை எவ்வாறு தீர்க்கும் என்று யோசியுங்கள். யோசித்துக் கொண்டே இருங்கள். 
 வாய்ப்புக்கள் உங்கள் கண்களில் படும். பயன்படுத்திக் கொள்ளுங்கள். 

உலகம் மாறிக்கொண்டே இருக்கிறது. முன்பு கடிதம் தகவல் தொடர்பு கருவியாக இருந்தது. இன்று கைபேசி அந்த இடத்தைப் பிடித்துள்ளது. மாற்றத்திற்கு  ஏற்றார் போல் உங்கள் கலையை வடிவமைத்துக் கொள்ளுங்கள்.  அப்போது தான் உலகத்தோடு ஒத்து வாழ முடியும். 

வெற்றி தோல்வியில் இல்லை வாழ்க்கை. வாழ்வதே மகிழ்ச்சி! இந்த நொடி நீங்கள் செய்யும் வேலையில் உங்களை மறந்து போகிறீர்களா? விவரிக்க முடியாத அமைதியை உணர்ந்தீர்களா? அது தான் வாழ்வது! அது தான் வாழ்க்கை! உங்கள் கலை அந்த உணர்வையும் கொடுக்கும், பணத்தையும் ஈர்க்கும் கொடுக்கும்.


†***********************†****************


வெற்றிக்கு உதவும் ஓரை!

எந்த நேரத்தில் எந்த வேலை செய்தால் வெற்றி வாய்ப்பு கூடும் என்று தெரியுமா? இதற்கு விடை ஓரையில் உள்ளது. ஓரை என்றால் என்ன? எந்த ஓரையில் என்ன வேலை செய்ய வேண்டும், அன்றாட வாழ்வில் எவ்வாறு பயன்படுத்துவது, என்பதை அறிந்து கொள்வோம்.

ஜோதிடத்தில் ஒரு நாள் என்பது காலை சூரிய உதயத்தில் இருந்து அடுத்த நாள் சூரிய உதயம் வரை எடுத்துக் கொள்ளப் படும். இருபத்து நான்கு மணி நேரம் கொண்டது ஒரு நாள். ஜோதிடத்தில் ஒவ்வொரு மணி நேரமும் ஒரு கிரகத்திற்கு கொடுக்கப் பட்டுள்ளது. அதாவது ஒவ்வொரு மணி நேரத்தை ஒவ்வொரு கிரகம் ஆளும். சூரியன், சுக்கிரன், புதன், சந்திரன், சனி, குரு, செவ்வாய், என ஏழு கிரகங்கள். இதில் ராகு கேதுவுக்கு இடம் இல்லை. இதை தான் ஓரை என்று சொல்கிறோம்.
முதலில் இந்த ஏழு கிரகங்களின் வரிசையைப் பார்போம். சூரியன், சுக்கிரன், புதன், சந்திரன், சனி , குரு, செவ்வாய் என அமையும். இது மாறாது. இந்த ஏழு கிரகங்களின் வரிசை ஒவ்வொரு நாளும் எப்படி அமையும் என்பதை பார்ப்போம். 

எடுத்துக்காட்டாக ஞாயிற்றுக் கிழமை, முதல் ஓரை சூரிய ஓரை ஆகும். சுமாராக காலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை. காரணம் ஞாயிற்றுக் கிழமை சூரியனுக்கு உண்டான நாள். அதனால் அந்த நாள் சூரிய ஓரையோடு துவங்கும். திங்கட் கிழமை சந்திர ஓரையோடு துவங்கும். இதே போல் ஒவ்வொரு நாளும் அந்த நாளுக்கு உரிய கிரகத்தின் ஓரையோடு துவங்கும்.
ஞாயிற்றுக் கிழமை ஓரை வரிசை எவ்வாறு அமையும் என்று பார்ப்போம். 
காலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை சூரிய ஓரை; ஏழு முதல் எட்டு வரை சுக்கிர ஓரை; எட்டு முதல் ஒன்பது வரை புதன் ஓரை; ஒன்பது முதல் பத்து வரை சந்திர ஓரை; பத்து முதல் பதினொன்று வரை சனி ஓரை; பதினொன்று முதல் பன்னிரண்டு வரை குரு ஓரை; பன்னிரண்டு முதல் ஒரு மணி வரை செவ்வாய் ஓரை. மீண்டும் ஒரு மணி முதல் இரண்டு மணி வரை சூரிய ஓரை; இரண்டு மணி முதல் மூன்று மணி வரை சுக்கிர ஓரை என இந்த சுழற்சி மறு நாள் காலை சூரிய உதயம் வரை தொடரும். 

ஏன் இதை பயன்படுத்த வேண்டும்?
ஒவ்வொரு கிரகத்துக்கும் இயற்கையிலேயே ஓர் ஆற்றல் உண்டு. அந்த கிரகம் ஆளும் நேரத்தில், அந்த ஆற்றல் நம் வேலைகளில் தாக்கத்தை உண்டாக்கும் என்று ஜோதிடத்தில் சொல்லப் பட்டுள்ளது. 

எடுத்துக் காட்டாக: 

சூரிய ஓரை - அதிகாரம், தலைமைத்துவம், அரசு சம்பந்தமான வேலைகளுக்கு நல்லது.
சுக்கிர ஓரை - கலை, திருமணம் சம்பந்தமான பேச்சு, அழகு சம்பந்தமான வேலைகளுக்கு நல்லது.
புத ஓரை - படிப்பு, தொடர்பு, பேச்சுவார்த்தை, வியாபாரம் இவற்றிற்கு  நல்லது.
சந்திர ஓரை - பயணம், புதிய தொடக்கங்கள், மக்களை சந்திக்க நல்லது.
சனி ஓரை - கடின உழைப்பு தேவைப்படும் வேலைகள்,  புதிய தொடக்கங்கள் தவிர்க்கலாம்.
குரு ஓரை - கல்வி, ஆன்மீகம், முக்கிய முடிவுகள் எடுக்க நல்லது.
செவ்வாய் ஓரை - விளையாட்டு, சவாலான வேலைகள், தைரியம் தேவைப்படும் காரியங்களுக்கு நல்லது.

இணையதளத்தில் ஓரை அட்டவணை கிடைக்கும்.

அன்றாட வாழ்வில் எப்படி பயன்படுத்துவது?
நீங்கள் செய்யப் போகும் வேலை எந்த கிரகத்தின் ஆளுமைக்கு உட்பட்டது என்று பாருங்கள். அந்த கிரகத்திற்கு உண்டான நாளில் அதன் ஓரையில் செய்து பாருங்கள். அந்த நாளுக்கு காத்திருக்க முடியாது உடனே செய்ய வேண்டும் என்றால் ஒவ்வொரு நாளும் அந்த கிரகத்தின் ஓரை வரும் அப்போது செய்யுங்கள். 

நினைவில் வைத்து கொள்ளுங்கள் ஓரை அட்டவணை என்பது ஒரு வழிகாட்டி மட்டும்தான், உங்களின் விடா முயற்சி, கடின உழைப்பு மற்றும் கடவுள் நம்பிக்கை எப்போதும் இருக்க வேண்டும்!

________________________________________________________

இப்படி செய்தால் பணம் வரும்!

நாம் எதை அடைய ஆசைப் படுகின்றோமோ அது நாம் இருக்கும் இடத்திலேயே இருக்கின்றது. நாம் அதை கவனிப்பதில்லை. ஏன்! காரணம் நம் ஆசை தெளிவாக, முழு நம்பிக்கையோடு இல்லை! 
நம் மூளை மிகச் சிறந்த வழி காட்டி! அதனிடம் நாம் எதை அடைய ஆசைப் படுகிறோம் என்பதை தெளிவாக, என்னால் அடைய முடியும் என்று முழு நம்பிக்கையோடு சொல்லிவிட்டால் அதை அடைவதற்கான வழியை உறுதியாக காட்டும். 

எடுத்துக் காட்டாக, நீங்கள் பணத்தை  அடைய ஆசைப் படுகின்றீர்கள்; அதை அடைய முடியும் என்று ஆழமாக நம்புகிறீர்கள்; நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் தொடர்ந்து தினமும் பணத்திலேயே கவனம் செலுத்தி, பணத்தை அடைவது தான் என் ஆசை , என்னால் பணத்தை அடைய முடியும் என்று ஆழமாக நம்பி, உங்கள் அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.  நீங்கள் எங்கு சென்றாலும் அங்கே பணத்தை அடைவதற்கான வழிகள் தென்படும்! 
அதாவது, நீங்கள் ஒரு நூலகம் சென்றால் அங்கே பணம் தொடர்பான வார இதழ், நூல்கள், உங்கள் பார்வையில் படும். அந்த நூல் அல்லது இதழில் பணம் ஈட்டுவது குறித்து ஏதாவது ஒரு வழி உங்களுக்கு தெரிய வரும். 
இதற்கு முன்பு நீங்கள் நூலகம் சென்றிருக்கலாம், அப்போது இந்த பணம் தொடர்பான இதழ்கள், நூல்கள் அங்கே இருந்திருக்கும், ஆனால் உங்கள் கண்ணில் பட்டிருக்காது. 
இப்போது நீங்கள் அதை காண்பதற்கு காரணம், பணத்தின் மீதான உங்களின் தெளிவான ஆசையும், அதை என்னால் அடைய முடியும் என்ற ஆழமான நம்பிக்கையும் தான்! 

தாயம் விளையாட்டை நீங்கள் பார்த்திருக்கலாம் அல்லது விளையாடியிருக்கலாம். தாயம் விழ வேண்டும் என்று மனதில் ஆழமாக நம்பி பகடையை உருட்டினால் அங்கே தாயம் விழும்! இதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். 
பகடை ஓர் உயிரற்ற பொருள்; ஆனாலும் அது உங்கள் சொல்படி செயல் படுகிறது. காரணம், உங்களின் தெளிவான எண்ணமும்,  அதை அடைய முடியும் என்ற அழகான நம்பிக்கையும் தான். பணத்தை நீங்கள் பார்க்கும் பார்வையை மாற்றுங்கள். பணத்தை எப்போது கூப்பிட்டாலும் ஓடோடி வந்து உதவும் நல்ல நண்பனாக பாருங்கள். பணத்தோடு பழக ஆசைப் படுங்கள். உங்கள் ஆசை நிறைவேறும்!
 
சமூகத்தில் பல சிக்கல் உள்ளன.
தனி மனித வாழ்க்கையிலும் பல சிக்கல் உள்ளன. இவற்றில், எவற்றை, உங்கள் தனித் திறமையைக் கொண்டு  தீர்த்து வைக்க முடியும் என்று எண்ணுங்கள். அங்கே தான் பணம் உள்ளது!  எப்போதும் பணத்தை ஈர்ப்பது குறித்து நினைத்துக் கொண்டிருந்தால் நீங்கள் எங்கு சென்றாலும் யாருடன் பேசினாலும் அங்கு பணம் வரும் வழி தென்படும். இது உறுதி!

எல்லாருக்கும் மனக் குறைகள் 
உள்ளன; அவற்றை நினைத்துக் கொண்டே இருப்பதால் ஒரு பயனும் இல்லை. உங்களிடம் இப்போது இருப்பதை நினைத்து மகிழுங்கள்! நம் மூளையில் எண்பத்து ஆறு கோடி நியூரான்கள் உள்ளன. நம் எல்லா செயல்களுக்கும் காரணம் நியூரான்கள் தான்! ஒரு நியூரான் பயன்படுத்தி ஒரு ரூபாய் ஈட்ட முடியாதா? எண்பத்து ஆறு கோடி ஈட்டக் கூடிய ஆற்றல் நம் ஒவ்வொருவருக்குள்ளும் உண்டு! அந்த வகையில், நாம் ஒவ்வொருவரும், பிறக்கும் போதே கோடீஸ்வரராகத்  தான் பிறந்துள்ளுளோம்! 

மனதை மகிழ்ச்சியாக வைத்து கொள்ளுங்கள். நன்றாக உடை அணியுங்கள். மனிதர்களோடு பேசும் போது சொற்களை கவனமாக கையாளுங்கள். உங்களுக்கு பிடிக்காதவர்களே ஆனாலும் நான்கு நல்ல சொற்கள் சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்று விடுங்கள். உங்கள் வளர்ச்சி கண்டு பொறாமை படுபவர்களிடம் இருந்து சற்று தள்ளியே இருங்கள். நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் மனிதர்களோடு பழகுங்கள். 

பணம் என்பது பொருட்கள் வாங்க நாம் பயன்படுத்தும் காகித பணமோ உலோகக் காசோ மட்டும் அல்ல. பணம் அல்லது செல்வம் எட்டு வகை படும். உங்கள் விடாமுயற்சி, துணிவு, தனித் திறமை, கல்வி மற்றும் கலை; மற்றவர் உங்கள் மீது வைத்திருக்கும் மதிப்பு மற்றும் மரியாதை, அப்பா, மாமா, தாத்தா என்று பாசத்தோடு அழைக்கும் உங்கள் வீட்டு குழந்தைகள், நல்ல நட்பு, நல்ல உறவினர் இவையும் பணம் அல்லது செல்வம் தான்! பணத்திற்குரிய தெய்வம் திரு மஹா லஷ்மி. எட்டு மகா லஷ்மி ஒன்றாக உள்ள திரு உருவப் படத்தை வாங்கி வைத்து கொண்டு அடிக்கடி பாருங்கள். உங்களிடம் உள்ள செல்வத்தை நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.

பல ஆண்டுகளாக மேலே சொல்லப்பட்ட கருத்துகளை கடைபிடித்து வாழ்ந்து வருகிறேன்,  ஆனாலும் வளர்ச்சி இல்லையே என்கிறீர்களா?  சீன நாட்டில் உள்ள ஒரு வகை மூங்கிலின் முளைக்கும் காலம் ஐந்து ஆண்டுகளாம்! இன்று பூமியில் விதையை விதைத்தால் ஐந்து ஆண்டுகள் கழித்துத் தான் முளை விடுமாம்!. அது வரை நீர் ஊற்றி, உரம் போட்டு பாதுகாக்க வேண்டும். முளைத்து வந்ததும் ஐந்தே வாரத்தில் தொண்ணூறு அடி உயரம் வளருமாம்! உங்கள் விடாமுயற்சி காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை உருவாகிக் கொண்டிருக்கிறது. அது சூறாவளியாக மாறும் வெகு விரைவில்! நம்புங்கள்! உங்கள் உழைப்பு வீண் போகாது. நம்புங்கள்!

உங்கள் எண்ணங்களில் நீங்கள் செய்யும் சிறு மாற்றங்கள் கூட, வாழ்க்கையில் மிகப் பெரிய வளர்ச்சியை உண்டாக்கும். 


******************************************

முழுமையான சரணாகதி என்றால் என்ன? 
சரணாகதியின் ஐந்து அங்கங்கள். 

சரணாகதியின் ஐந்து அங்கங்கள் பற்றி தெரிந்துகொள்வோம். அவற்றை  கடைபிடித்து நம் மன அமைப்பை மாற்றி கவலையை விரட்டி இன்பத்தை அனுபவிப்போம். 

முதல் அங்கம்: அனுகூல்ய சங்கல்பம். 
இறைவனுக்கு விருப்பமானதை செய்வேன் என்று முடிவு செய்து. எண்ணம் சொல் செயல் யாவிலும் இறைவனுக்கு விருப்பமானதை தேர்வு செய்வது. நம் நண்பரோ உறவினரோ தவறான செயல் செய்யும் போது உறுதியோடு இது தவறானது என்று சுட்டிக் காட்டி அறிவுரை சொல்வது.

இரண்டாம் அங்கம்: பிராதிகூல்ய வர்ஜனம்.
இறைவன் விருப்பத்திற்கு எதிரானவை எது இருந்தாலும் அதை விட்டுவிடுவது. நண்பரோ உறவினரோ தவறான செயல் செய்யும் போது, இது இறைவனுக்கு விருப்பமானது அல்ல என்று நீங்கள் அவர்  தவறை சுட்டிக் காட்டியும் அவர்கள் அதை தொடர்ந்தால் அவர்கள் உறவை விட்டுவிடுவது.

மூன்றாவது சங்கல்பம்: கார்பண்யம். தன்னால் ஒன்றும் செய்ய முடியாது இறைவனே துணை என்று ஆழமான நம்பிக்கை. மகாபாரதத்தில் திரௌபதியின் ஆடையை துச்சாதனன் இழுத்த போது எவ்வளவோ போராடி தப்பிக்க முடியாமல் திரௌபதி தன் கையை உயர்த்தி நீயே என்னை காப்பாற்ற வேண்டும் என்று கண்ணனை சரணடைந்தது போல்.

நான்காம் சங்கல்பம்: இறைவன் ஒருவனே காப்பான் என்ற ஐயமற்ற முழுமையான நம்பிக்கை. பருந்து கோழிக் குஞ்சை பிடிக்க வரும் போது குஞ்சு தன் தாய் என்னைக் காப்பாற்றுவாள் என்று முழு நம்பிக்கையோடு தன் தாயிடம் ஓடுகிறதோ அதைப் போல.

ஐந்தாவது சங்கல்பம்: கோப்த்ருத்வ வரணம்.
இறைவனை மட்டுமே தன் பாதுகாவலனாக உணர்வுப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளுதல். அந்தக் கோழிக் குஞ்சு தன் தாயை பாதுகாவலாக உணர்வுப்பூர்வமாக தேர்ந்தெடுத்தைப் போல.

மேலே சொன்ன ஐந்து அங்கங்களையும் ஐயமற்ற முழுமையான மனதோடு அன்றாட வாழ்வில் கடைபிடுத்து இன்பமாக வாழ்வோம்.
 



******************************************
உடல் எடை கூட மன அழுத்தம் காரணமா?

உடல் எடை கூட மன அழுத்தமும் ஒரு காரணமாகும். அது எப்படி என்று பார்ப்போம். நம் கவலைகள் நம் செயல்களை மட்டுமல்ல நம் தூக்கத்தையும், வயிற்றின் உணவு செரிக்கும் தன்மையையும் பாதிக்கிறது. இதனால் நாம் உண்ணும் உணவில் பெரும் பகுதி கொழுப்பாக மாறுகிறது. கவலைப்படாமல் இருந்தால் உடல் எடையை குறைக்கலாம். 
 எப்படி கவலைப்படாமல் இருப்பது? நம் மனதில் ஒரு நேரத்தில் ஒரு எண்ணம் மட்டுமே இருக்க முடியும். அந்த எண்ணத்தை அகற்ற வேண்டும் என்றால் அதை விட வலிமையான எண்ணம் வந்தால் அது தானாக அகன்று விடும். நீங்கள் எவ்வளவு நேரம் ஒரு எண்ணத்திற்கு கவனம் கொடுக்கிறீர்களோ அவ்வளவு நேரம் அந்த எண்ணம் உங்கள் மனதில் இருக்கும். 
ஏதோ ஒரு கவலை தரும் எண்ணம் அல்லது நிகழ்வு நினைவுக்கு வருகிறது என்று வைத்துக்கொள்வோம். 
நீங்கள் அதை எவ்வளவு நேரம் கவனிக்கிறீர்களோ அவ்வளவு நேரம் அது உங்களை துன்பப் படுத்தும்.  
மாறாக அந்த கவலை தரும் எண்ணம் நினைவுக்கு வரும் போது எழுந்து நடக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அந்த துன்பம் தரும் எண்ணம் வலிமை இழந்து தானாக சென்று விடும். காரணம் உங்கள் கவனத்தை நடப்பதில் செலுத்துகிறீர்கள்! 
 மனதில் ஒரு நேரத்தில் ஒரு எண்ணம் மட்டுமே இருக்க முடியும் என்பது விதி. 
அதாவது நம் கவனத்தை அல்லது நோக்கத்தை மாற்றினால் கவலையை மாற்றலாம். கவலையை மாற்றினால் உடல் எடையை குறைக்க முடியும். 
இதை விஞ்ஞானிகள் ஒரு ஆய்வின் மூலம் உறுதி செய்து உள்ளனர்.
ஒரு பெரிய மருத்துவமனையில், தரையைத் துடைப்பது, படுக்கை சரி செய்வது போன்ற பணிகள் செய்யும் தூய்மை பணியாளர்களை இரு குழுவாக பிரித்தார்கள். 
ஒரு குழுவை அழைத்து அவர்களிடம், காலையில் இந்த நேரத்திற்கு வர வேண்டும், இன்ன வேலையை இந்த நேரத்தில் செய்து முடிக்க வேண்டும். அன்றைய நாளுக்கு உண்டான வேலையை முடித்துவிட்டு தான் வீடு செல்ல வேண்டும்  என்று கட்டளை இட்டார்கள்.
இன்னொரு குழுவை அழைத்து அவர்களிடம் நீங்கள் இங்கே செய்வது வேலை அல்ல உடற்பயிற்சி. இந்த வேலைகள் உங்கள் உடலை உறுதி ஆக்கும். காலையில் இந்த நேரத்திற்கு வர வேண்டும் இந்த நேரம் வீடு செல்ல வேண்டும் என்று கூறினார்கள்.
இரண்டு குழுவிற்கும் ஒரே தன்மையான வேலையைத் தான் கொடுத்தார்கள்.  
இரண்டு குழுவினர்கள் உடல் எடை, இரத்த அழுத்தம், போன்ற வற்றின் அளவுகளை குறித்துக் கொண்டனர். 
சில மாதங்கள் கழித்து மீண்டும் அவர்களின் உடல் எடை இரத்த அழுத்தத்தை ஆய்வு செய்தனர். 
ஓர் உண்மையை கண்டு பிடித்தனர். 
இந்த வேலையை இந்த நேரத்தில் செய்து முடிக்க வேண்டும் என்று கட்டளை கொடுக்கப்பட்ட  குழுவில் உள்ள அனைவருக்கும் உடல் எடை இரத்த அழுத்தம் நன்றாக கூடியிருந்தது. அது மட்டும் அல்ல அவர்கள் மிகுந்த மனச் சோர்வுடன் காணப்பட்டனர். வேலைக்கு செல்வதை பெரும் சுமையாகக் நினைத்தார்கள்.
இது வேலை அல்ல உடற்பயிற்சி என்று சொல்லப்பட்ட குழுவில் உள்ள அனைவருக்கும் உடல் நல்ல உறுதி அடைந்தும் இரத்த அழுத்தம் சீராகவும் இருந்தது. இவர்கள் மிகுந்த மன எழுச்சியுடன் காணப்பட்டனர். வேலைக்கு செல்கிறோம் என்பதை விட உடற்பயிற்சிக்கு செல்கிறோம் என்ற எண்ணமே மிகுந்து இருந்தது. 
இரண்டு குழுவிற்கும் வேலை ஒன்று ஆனால் நோக்கம் வேறு. 
இதிலிருந்து நம் நோக்கத்தை மாற்றினால் கவலையை மாற்றலாம்; கவலைகள் இல்லை என்றால் உடல் எடை குறையும்,  மன நலத்தோடு வாழலாம் என்பது தெரிய வருகிறது


_-------------------------------------------------------------------
பணம் சேர்க்க வேண்டுமா! லஷ்மியின் இந்த விதிகளை படியுங்கள்!

பணம் சேர்க்க விடா முயற்சியோடு கடுமையாக உழைக்கிறீர்கள். அது மட்டும் போதாது. பணம் உங்களிடம் தங்க வேண்டுமானால் லஷ்மியின் இந்த ஐந்து விதிகளை தெரிந்து கொண்டு அவற்றை அன்றாட வாழ்க்கையில் கடைபிடியுங்கள். இந்த விதிகளை யார் கடைபிடிக்கிறார்களோ அவர்கள் வீட்டில் லஷ்மி விரும்பி வாசம் செய்வாள்.

முதல் விதி. "இல்லை" என்ற சொல்லை பயன்படுத்தாதீர்கள். "பணமே இல்ல", "கையில ஒரு பைசா கூட இல்ல", "வறுமையில சிரிக்கிறேன்", "வறுமை வாட்டுது", "தரித்திரம் புடுங்குது", "எவ்வளவு வந்தாலும் கையில காசு தங்கல", "என் கஷ்டம் எப்ப தான் தீருமோ ", "ஜான் ஏறினா முழம் சறுக்குது". இது போன்று அன்றாடம் குறைபட்டுக் கொண்டு வாழ்பவர் வீட்டிற்கு லஷ்மி வரவே மாட்டாள். 
உங்கள் சொற்களை மாற்றுங்கள். ஆக்கமும் அழிவும் நாவால் வருவது.

இரண்டாம் விதி. இருப்பதை கொண்டு மகிழ்வது. யார் ஒருவர் இருப்பதை கொண்டு நிறைவோடு மகிழ்வோடு வாழ்கிறார்களோ, குடிசை வீடு ஆனாலும் தூய்மையாகவும் அழகு படுத்தியும் வாழ்கிறார்களோ, தங்களை தாங்களே விரும்பி தங்களை அழகு படுத்திக் கொள்கிறார்களோ, கந்தை ஆனாலும் கசக்கிக் கட்டு, கூழானாலும் குழித்து குடி என்ற முன்னோர் சொல்லிய படி தூய்மையாக வாழ்கிறார்களோ, பார்க்கும், பழகும் மனிதர்களிடம் ஆறுதலான, மனம் குளிரும் சொற்கள் சொல்கிறார்களோ, அவர்கள் வீட்டில் விரும்பி வந்து வாசம் செய்வாள் லஷ்மி. 

மூன்றாவது விதி. மகிழ்வோடு செலவு செய்ய வேண்டும். லஷ்மி உலா வருவதையே விரும்புவாள். புராணங்களில் சொல்லப் பட்டுள்ளது. ஓரிடத்தில் இருப்பதை அவள் விரும்பமாட்டாள். குழந்தையை நாம் தூக்கி வைத்துக் கொள்ளும் போது நழுவாமல் பாதுகாக்கிறோம் என்று நினைத்து கொண்டு இறுக்கமாக அணைந்து பிடித்துக் கொண்டால் அக்குழந்தை எரிச்சல் அடைந்து நம்மை விட்டு கீழே இறங்க துடிக்கும். லஷ்மியும் அந்த குழந்தை போலத் தான். லஷ்மி சுற்றுலா விரும்பி. தேவையான போது மன மகிழ்ச்சியோடு செலவு செய்யுங்கள். குறைபட்டுக் கொண்டே அல்ல. 

நான்காம் விதி. கருணையோடு இருங்கள். லஷ்மி கருணை வடிவானவள். பிறர் துன்பப்படும் போது அவர்களுக்கு துணையாக நில்லுங்கள். "எனக்கு யார் வந்தா, நான் ஏன் போய் நிக்கணும்" என்று நினைக்காதீர்கள். நீங்கள் ஒருவருக்கு செய்யும் நன்மை எப்படியாவது திரும்ப உங்களை வந்து அடையும். இது விதி.உள்ளன்போடு பழகினால் நீங்கள் எல்லோருக்கும் பிடித்த மனிதராய் மாறுவீர்கள். லஷ்மிக்கும் உங்களை பிடிக்கும். அவள் உங்கள் வீட்டுக்கு வழி கேட்டு வந்து அமர்வாள் இது உறுதி. 

ஐந்தாவது விதி. உங்கள் திறமையை அறிவை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். எந்த அளவுக்கு உங்கள் திறமையை பகிர்ந்து கொள்கிறீர்களோ அந்த அளவு பணப் பெருக்கம் உண்டாகும். உங்கள் அறிவு உங்களோடு இருப்பவருக்கு தெரிந்தாலும் ஒருவேளை அது அவருக்கு பயன்படாமல் இருக்கலாம். ஆனால் உங்கள் திறமை அவரின் உறவினருக்கோ நண்பருக்கோ இவர் மூலம் தெரிந்து உங்களுக்கு நன்மை உண்டாகும். எனவே உங்கள் திறமையை பகிர்ந்து கொள்ளுங்கள் மறைந்து வைக்காதீர்கள்.

உழைப்பு மற்றும் விடா முயற்சியோடு மேலே சொன்ன ஐந்து விதிகளைப் பின்பற்றி செல்வச் செழிப்பான வாழ்க்கை வாழுங்கள்.

சரணாகதி தத்துவம் -
முயல் வேடன் கதை.

காட்டில் வேடன் ஒருவன் ஒரு முயல் குட்டியை பிடித்தான். அக்குட்டியின் தாய் முயல் அவ்வேடனோடு போராடி தன் குட்டியை காப்பாற்ற முயன்றது. ஆனால் முடியவில்லை. வேடன் அக்குட்டியை தன் பையில் போட்டுக் கொண்டு நடக்கத் தொடங்கினான். தாய் முயல் விடவில்லை அவ்வேடனை பின் தொடர்ந்து அவன் கால்களை இறுக்கமாக பற்றிக் கொண்டது. எனக்கு வேறு வழி இல்லை நீதான் உதவ வேண்டும் என் குட்டியை எனக்கு தந்து விடு என்று பார்வையால் கெஞ்சியது. தாய் முயல் கெஞ்சுவதைக் கண்டு வேடன் மனம் மாறியது. அவன் உள்ளத்தில் கருணை பொங்கியது. தன் பைக்குள் இருந்த குட்டி முயலை எடுத்து தாய் முயலிடம் ஒப்படைத்தான். தாய் முயல் தன் குட் டியோடு துள்ளி குதித்து காட்டுக்குள் சென்றது. 
சரணாகதி எப்படி செய்ய வேண்டும் என்று அந்த தாய் முயலுக்கு யார் சொல்லித் தந்தார்கள்?
சரணாகதி செய்தால் காப்பாற்றியே தீர வேண்டும் என்ற நீதியை படிப்பறிவு இல்லாத வேடன் எப்படி தெரிந்து கொண்டான்? ஆனாலும் அந்த முயல் செய்த சரணாகதியை ஏற்று அது கேட்டதை தந்து விட்டான்.
சரணாகதி தத்துவம் என்றால் என்னவென்றே தெரியாத ஒரு சாதாரண வேடன் தன்னிடம் கெஞ்சிய முயலுக்கு கருணை காட்டுகிறான் என்றால், அண்டத்தைப் படைத்து காத்து வழி நடத்தும் இறைவனின்  திருவடிகளை பிடித்துக் கொண்டு, நான் திக்கற்றவன், செய்வதறியேன், இனி நீயே கதியென சரணடைந்தால் எவ்வளவு கருணை செய்வான்.
எங்கும் நீக்கமற நிறைந்த இறைவனை வணங்கி சரணடைந்து மகிழ்ச்சியோடு வாழ்வோம்.




______________________________________________

உள்ளது நாற்பது - மெய்ப்பொருள் கண்ட செம்மல் ரமணப் பெருமான்.

இன்று நாம்  “மெய்ப்பொருள் கண்ட செம்மல் ரமணப் பெருமான்” அருளியஉள்ளது நாற்பது” நூல் பற்றி காண்போம்.

கடந்த கால கசப்பான நிகழ்வுகள், மனசோர்வை உண்டாக்குகின்றன; எதிர்காலம் குறித்த பயம், கவலையை உண்டாக்குகின்றது. இன்பம் என்பது ஓர் எண்ணம்; துன்பம் என்பது ஓர் எண்ணம். எண்ணங்களை மாற்றி வேண்டியதை அடையலாம். எண்ணங்கள் உண்டாகும் இடம் மனம். எண்ணங்களை புரிந்து கொண்டு அவற்றை கையாள  உள்ளது நாற்பது நூல் பேருதவி புரிகின்றது.

மெய்ப்பொருள் கண்ட செம்மல் ரமணப் பெருமான் அறிவுறுத்துவதும் கருத்துக்கள் இரண்டுஒன்று நான் யார் என்ற ஆராய்சசி, மற்றோன்று இறைவனிடம் சரணாகதி அல்லது அடைக்கலம் அடைவது. உள்ளது நாற்பது நூல்  இவற்றை விளங்க வைப்பதாக உள்ளது. அவர் வாழ்ந்த காலத்தில் அவரோடு உரையாடிய அறிஞர்கள் அந்த உரையாடல்களை நூல்களாக வெளியிட்டுள்ளனர். உள்ளது நாற்பது நூலை படிக்கும் போது உண்டாகும் ஐயங்களை தெளிவுபடுத்திக் கொள்ள  அந்நூல்கள் உதவியாக இருக்கும்.

மனதில் உண்டாகும் எண்ணங்கள் நம் கட்டுப்பாட்டில் இல்லை, ஆனால் அவற்றை கவனிப்பதும் கவனிக்காமல் தவிர்ப்பதும் நம் கட்டுப்பாட்டில் உள்ளது. இதற்கு மனவலிமை தேவை; அம்மன வலிமையை தியானத்தின் மூலம் பெறலாம். சரணாகதி அல்லது அடைக்கலம் என்பது இறைவனிடம் நம் பொறுப்புக்களை ஒப்படைத்து விட்டு இறைவன் கவனித்துக் கொள்வார் என்று நம்புவது.

மெய்ப்பொருள் கண்ட செம்மல் ரமணப் பெருமான் வாழும் காலத்தில் ஓர் அறிஞர் உள்ளது நாற்பது நூலை படித்துவிட்டு பின்வருமாறு கேட்டார்

"ஐயா தாங்கள் அருளிய உள்ளது நாற்பது நூலை படித்தேன், எனக்கு புரியவில்லை". அதற்கு பெருமான் "மீண்டும் மீண்டும் படியுங்கள் அந்த சொற்கள் எல்லாம் உங்களுக்கு புரிந்துவிடும்" என்றார்.

நாமும் உள்ளது நாற்பது நூலை  படித்து பயன் பெறுவோம்.

நன்றி வணக்கம்..!





"மெய் கண்ட ஞான சபை"




"வள்ளல்  கன்னியப்ப சுவாமிகள்" அவர்களின் குரு பூஜை விழா 12/2/23 (ஞாயிற்று கிழமை) அன்று   வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 2வது ஞாயிற்று கிழமை குரு பூஜை விழா கொண்டாடப்படும். 

வேளாங்கண்ணி  மேரி மாத ஆலயம்

வேளாங்கண்ணி ஆதி  மேரி மாத ஆலயம்



வேளாங்கண்ணி புதிய மேரி மாத ஆலயம் 


“மெய்கண்ட ஞான சபை”

 தவத்திரு வள்ளல் கன்னியப்ப சுவாமிகள்-அம்பத்தூர்.

வள்ளல் திரு கன்னியப்ப சுவாமிகள்  1902-ம் ஆண்டு ஜனவரி
மாதம் 2-ந்தேதி துரைசாமி முதலியாருக்கும்,தனபாக்கியத்துக்கும்
மகனாக பிறந்தார்சிறு வயதிலேயே இவருக்குள் ஆன்மீகத்தேடல்
மிக அதிகமாக இருந்தது. அடிக்கடி சிவ ஆலயங்களுக்கு சென்று
தன்னை மறந்து தவம் இருந்து அதில் மூழ்கிவிடுவார்.


சென்னை திருவொற்றியூரில் அப்போது பரஞ்சோதி மகான் புகழ்பெற்ற மகானாக திகழ்ந்து கொண்டிருந்தார். அவரிடம் சென்று கன்னியப்ப சுவாமிகள் சேர்ந்தார். அவருக்கு அடிப்படை பயிற்சிகள் அனைத்தையும் கொடுத்து குண்டலினி யோக கலையையும் பரஞ்சோதி மகான் கற்றுக் கொடுத்தார். பின்பு தீட்சையும் வழங்கினார்.

இதன் காரணமாக மிகச்சிறந்த சித்த புருஷராக திரு கன்னியப்ப சுவாமிகள் மாறினார்.

சிவபெருமான் மீது நிறைய பாடல்களும் பாடினார். அப்பாடல்கள்  இசைப்பாடல்களாக வெளி வந்துள்ளனஉணர்வின் ஒளியும் உன்னுள் உலகமும்’ என்ற மிக சிறப்பான
புத்தகத்தையும் கன்னியப்ப சுவாமிகள் அருளியுள்ளார் 223
பக்கங்கள் கொண்ட அப்புத்தகத்தின் முதல் 20 பக்கத்தை
படித்தாலே போதும் குண்டலினி பயிற்சியை மிக மிக எளிதாக
எப்படி கற்றுக் கொள்வது என்பதை தெரிந்து கொள்ள முடியும்.


சாதாரண மனிதர்களைப் போலவே  கன்னியப்ப சுவாமிகள் வாழ்க்கை நடத்தினார். ஆனால் அவருக்குள் ஆன்மீக சக்திகள் அதிகம் இருந்தன. அந்த சக்தியின் துணை கொண்டு அவர் பல்வேறு அற்புதங்களையும் நிகழ்த்தி காட்டினார். நோய்களை குணப்படுத்தினார் . தன்னை நாடி வரும் ஒவ்வொருவரிடமும் தினமும் சிவ பூஜை செய்யும்படி கேட்டுக் கொண்டார்.

"மெய் கண்ட ஞான சபை" என்ற சபையை உருவாக்கி குண்டலினி சக்தியை பெறுவது பற்றி மிகவும்  எளிமையாக சொல்லிக் கொடுத்தார்.




1994-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந் தேதி அவர் பரிபூரணம் அடைந்தார்.

அம்பத்தூர் ஞானமூர்த்தி நகரில் உள்ள இந்தியன் பேங்க் காலனியில் குருசுவாமி தெருவில் அவரது "மெய்கண்ட ஞான
சபை" உள்ளது அங்கு அவர் ஜீவசமாதி செய்யப்பட்டுள்ளார்.

தவத்திரு வள்ளல் கன்னியப்ப சுவாமிகள் உயிரோடு வாழ்ந்த வரை ஆண்டுதோறும் தனது பிறந்தநாளை ஆண்டுவிழாவாக கொண்டாடி வந்தார். அவர்ஜீவசமாதி ஆன பிறகு அது குருபூஜையாக நடத்தப்பட்டு வருகிறது.


ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 2-வது ஞாயிற்றுக்கிழமை மெய் கண்ட ஞான சபையில் குருபூஜை நடத்தப்படுகிறதுவருகிற பிப்ரவரி  13-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 28-வது ஆண்டு குருபூஜை நடைபெற உள்ளது.அன்று சிறப்பு பூஜைகளும், அன்னதானமும் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

அம்பத்தூரில் உள்ள மெய் கண்ட ஞான சபையில் தியானம்
செய்வதற்கு வசதிகள் உள்ளன. குண்டலினி யோக பயிற்சியில்
மேன்மை பெற விரும்புவோர்கள் அங்கு சென்று   தியானித்தால்
கன்னியப்ப சுவாமிகளின் அருள்- வழிகாட்டியாக கிடைக்கும்.

அவரது ஜீவசமாதியை அவரது பேரன் ஞானபிரகாசம் பராமரித்து வருகிறார்.
 98408 12939 என்ற எண்ணில் அவரை தொடர்பு கொண்டு 
தகவல்கள் பெறலாம்.

திரு ஞானபிரகாசம் 98408 12939 

 

 

 தவத்திரு வள்ளல் "கன்னியப்ப சுவாமிகள்"-அம்பத்தூர்















____________________________________________________________--________________

யோகாவில் உடலின் நிலைகள்.


யோகாவில் உடலை நான்கு வகையில் வளைக்கலாம். முன்னால் வளைக்கலாம்; பின்னால் வளைக்கலாம்; பக்கவாட்டில் வளைக்கலாம்; இடுப்புக்கு மேல் உடலை வளைக்கலாம். அதாவது, முன்னால் வளையும் ஆசனம், பின்னால் வளையும் ஆசனம், பக்கவாட்டில் வளையும் ஆசனம் ம்ற்றும் உடலை முறுக்கும் ஆசனம்.  இந்த நான்கு வகைகளை வரிசையாக இணைத்தோ, வரிசை மாற்றி இணைத்தோ ஆசனங்கள் பழகலாம். தொடக்கத்தில் ஒவ்வொன்றையும் தனித்தனியாக பழகுங்கள்; நல்ல தேர்ச்சி பெற்றதும் இணைத்து பழகுங்கள். ஒவ்வொரு முறையும் யோகா பழகும் போது இந்த நான்கு வகைகளில், வகைக்கு ஒரு ஆசனத்தை பழக வேண்டும்.

ஒவ்வொறு அசைவிலும் மூச்சை எவ்வாறு இணைப்பது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். பொதுவாக உடல் விரிவடையும் போது மூச்சை உள்ளே இழுக்க வேண்டும்; உடலை சுருக்கும் போது மூச்சை வெளியே விட வேண்டும். ஒரு சில ஆசனங்களுக்கு இது மாறுபடலாம், உங்கள் குருவிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். மூச்சை கூடுமான வரை 
மெதுவாகவும் ஆழமாகவும் இழுத்து விட முயலுங்கள். தொடக்கத்தில் கடுமையாக இருக்கும், பழகப் பழக எளிதாகிவிடும். 


யோக ஆசனம் பழகும் நிலைகள்.

யோக ஆசனங்களை மூன்று நிலைகளில் பழகலாம். படுத்த நிலை அல்லது கிடந்த நிலை; அமர்ந்த நிலை; நின்ற நிலை. ஒவ்வொரு நிலையிலும் பலன் வேறுபடும். முழுமையான பலன் நின்ற நிலையிலும், அதைவிட குறைவான பலன் அமர்ந்த நிலையிலும், அதைவிட குறைவான பலன் படுத்த அல்லது கிடந்த நிலையிலும் கிடைக்கும்.

உடல், மனம், எல்லா நாளும் ஒரே தன்மையில் இருப்பதில்லை. நாளுக்கு நாள் வேறுபடுகிறது. ஒரு நாள் மனம் ஊக்கத்துடனும், உடல் சுறுசுறுப்புடனும் இருக்கும். அப்படிபட்ட நாளில் நின்ற நிலையில் ஆசனங்களை பழக வேண்டும். சோர்வு தெரியாது. இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையாவது நின்ற நிலை ஆசனங்கள் பழகுவது மிக மிக நல்லது. உயர் நிலை ஆசனங்கள் பழகும் போது, உடல் நன்றாக வளைந்து கொடுக்கும்,  எளிமையாக இருக்கும். 

சில நாள் மனம் சிறிது தளர்வாக இருக்கும். உடலிலும் சுறுசுறுப்பு சிறிது குறைந்திருக்கும். அப்படி பட்ட நாட்களில் அமர்ந்த நிலையில் ஆசன்ங்கள் பழக வேண்டும். சில நாள் மனம் மிகவும் தளர்வாக இருக்கும், உடலும் சுறுசுறுப்பு இல்லாமல் இருக்கும், அப்படிபட்ட நாட்களில் படுத்த அல்லது கிடந்த நிலையில் ஆசன்ங்கள் பழக வேண்டும். 

எந்த நிலையிலும் நீங்கள், யோக ஆசனங்கள் பழகிட வகுத்த கால அட்டவனையை கடைபிடிக்க வேண்டும். உங்கள் உடலும் மனமும் ஒத்துழைக்காத போது அறிவின் துணை கொண்டு செயல் படுங்கள். உங்களுக்கு கிடைக்கும் நேரத்திற்கு ஏற்றார் போல் ஆசனங்களை பழங்குங்கள்.

ஒவ்வொறு முறையும் உடலை நான்கு வகையில், அதாவது, முன்னால் வளையும் ஆசனம், பின்னால் வளையும் ஆசனம், பக்கவாட்டில் வளையும் ஆசனம் ம்ற்றும் உடலை முறுக்கும் ஆசனம், இடம் பெற வேண்டும். வாரத்துக்கு ஒரு நாளோ, இரண்டு நாட்களுக்கு ஒரு முறையோ, 
மூன்று நாட்களுக்கு ஓரு முறையோ, அன்றாடமோ யோக ஆசனம் பழகும் பழக்கத்தை கடைபிடியுங்கள்.

========================================================

பவன முக்தாசனம் – 2 ஆம் நிலை

பவன முக்தாசன்
முதல் நிலையோடு கூடுதலாக சில அசைவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். முதுகு தரையில் நன்றாக படியும் படி படுத்துக்கொள்ளுங்கள். வலது காலை மடக்கி, இடது முட்டி அருகில் வலது பாதத்தை வைத்துக்கொள்ளுங்கள். இரண்டு கைவிரல்களை கோர்த்து, வலது முட்டியை பிடித்துக் கொள்ளுங்கள். மூச்சை நன்றாக உள்ளே இழுத்துக் கொள்ளுங்கள். மூச்சை மெதுவாக வெளியே விட்டுக்கொண்டே, வலது கால் முட்டியை வயிற்றை நோக்கி இழுங்கள்.  மூச்சு முழுவதும் வெளியேறும் வரை இழுங்கள். மூச்சு முழுவதும் வெளியேறிய நிலையில், உங்கள் வலது கால் தொடை, உங்கள் வயிற்றை அழுத்திக் கொண்டிருக்கும்.

அதே நிலையில், மீண்டும் மூச்சை நன்றாக உள்ளே இழுத்துக் கொள்ளுங்கள. மூச்சை உள்ளே இழுத்து முடித்ததும், மூச்சை மெல்ல வெளியே விட்டுக்கொண்டு, தரையிலிருந்து தலையை துக்குங்கள்; எவ்வளவு முடியுமோ அவவளவு உயரம் துக்குங்கள். ஒரு நிலைக்கு,  மேல் தரையிலிருந்து  முதுகும் தானாக தூக்கும். மூச்சை வெளியேவிட்டுக் கொண்டே முகத்தை கால் முட்டியை நோக்கி கொண்டுவாறுங்கள். மூட்டியை, மூக்கால் தொட முயலுங்கள். தொடக்கத்தில் இயலாது, ழுத்து பகுதியில் மெல்ல வலிக்கும்; பழகப் பழக சரியாகிவிடும். இவற்றை யெல்லாம் மூச்சை வெளியே விட்டவாறு செய்ய வேண்டும்.

மூச்சு முழுவதும் வெளியேறியதும்,  மீண்டும் மூச்சை மெல்ல உள்ளே இழுத்துக்கொண்டே முதலில் முதுகை தரையில் படுக்க வைக்க வேண்டும்; பிறகு தலையை தரையில் படுக்க வைக்க வேண்டும். மூச்சு முழுவதும் வெளியேறிதும்,  கோர்த்த கைகளை தளர்த்தி, வலது காலை விடுவிக்கவும்; கைகளையும் கால்களையும் தரையில் கிடத்தவும். இது ஒரு சுற்று; இவ்வாறு மொத்தம் மூன்று சுற்றுகள் வலது காலில் செய்ய வேண்டும், அதே போல் இடது காலிலும் செய்ய வேண்டும்.

பிறகு,இரண்டு காலக்ளையும் ஒரே நேரத்தில் மடக்கி செய்ய வேண்டும்.. இரண்டு கைகளையும் கோர்த்துக் கொள்ளுங்கள்; இரண்டு  கால்களையும் ஒரே நேரத்தில் மடக்கிக் கொள்ளுங்கள்; கோர்த்த கைகளுக்குள் இரண்டு கால் முட்டிகளையும் கொண்டுவரவும்; மூச்சை நன்றாக உள்ளே இழுத்துக்கொள்ளவும். பின்பு மூச்சை மெல்ல வெளியே விட்டுக்கொண்டே, இரு கைகளையும் மடக்கி, இரண்டு முட்டிகளையும் மெதுவாக வயிற்றை நோக்கி இழுக்கவும். மூச்சு முழுவதும் வெளியேறிய நிலையில், உங்கள் இரு கால் தொடைகளும், உங்கள் வயிற்றை அழுத்திக் கொண்டிருக்கும்; அதே நிலையில், மீண்டும் மூச்சை நன்றாக உள்ளே இழுத்துக் கொள்ளுங்கள. 

மூச்சை மெல்ல வெளியே விட்டுக்கொண்டு, தரையிலிருந்து தலையை தூக்குங்கள்; எவ்வளவு முடியுமோ அவவளவு உயரம் தூக்குங்கள். ஒரு நிலைக்கு,  மேல் தரையிலிருந்து  முதுகும் தானாக தூக்கும். மூச்சை வெளியேவிட்டுக் கொண்டே உங்கள் முகத்தை இரு கால் முட்டிகளை நோக்கி கொண்டு செல்ல முயலுங்கள். மூக்கை இரு கால் முட்டிகளுக்கு இடையில் கொண்டு செல்ல முயலுங்கள். தொடக்கத்தில் இயலாது, கழுதது பகுதியில் மெல்ல வலிக்கும்; பழகப் பழக சரியாகிவிடும். இவற்றை யெல்லாம் மூச்சை வெளியே விட்டவாறு செய்ய வேண்டும்.

மூச்சை முழுவதும் வெளியே விட்டதும்.  மீண்டும் மூச்சை மெல்ல உள்ளே இழுத்துக்கொண்டே முதலில் முதுகை தரையில் படுக்க வைக்க வேண்டும்; பிறகு தலையை தரையில் படுக்க வைக்க வேண்டும். பின்பு மூச்சை வெளியே விட்டுக்கொண்டே, கோர்த்த கைகளை தளர்த்தி, இரு கால் முட்டிகளையும் விடுவிக்கவும்; கைகளையும் கால்களையும் தரையில் கிடத்தவும். இது ஒரு சுற்று; இவ்வாறு மொத்தம் மூன்று சுற்றுகள் செய்ய வேண்டும், இது தான் முழுமையான பவன முக்த ஆசனம்.

படுத்த நிலையில் கண்களை மூடி உடலை கவனிக்கவும். மூச்சு ஓட்டத்தை கவனியுங்கள்; எண்ண ஓட்டத்தை கவனியுங்கள்; இதய துடிப்பை கவனியுங்கள்; வயிறு ஏறி இறங்குவதை கவனியுங்கள்; உடலில் எந்த இடத்தில் அழுத்தம் இருக்கிறது என்று கவனியுங்கள்; பவன முக்க ஆசனம் செய்யதை நினைத்துப் பாருங்கள்; எந்த நிலையில் மூச்சு திணறல் எற்பட்டது, உடலில் நடுக்கம் எற்பட்டது, என்றெல்லாம் நினைத்துப் பாருங்கள். இரண்டு, மூன்று நிமிடம் கழித்து வேறு ஆசனம் செய்ய துவங்குகள்.      

===================================================
யோகா பழகும் முறை:

உணவு உண்ட பின், குறைந்தது நான்கு மணி நேரம் கழித்து யோக ஆசனங்கள் பழக வேண்டும். யோக ஆசனங்கள் பழகும் போது உடல் நடுங்கக் கூடாது, தடுமாற்றம் இருக்கக் கூடாது. மூச்சு வேக வேகமாக ஓடக் கூடாது. கூடுமானவரை இயல்பாக மூச்சு விட முயலுங்கள். இருதயம் படபடக்கக் கூடாது.

யோக ஆசனங்கள் பழகுவதற்கு முன்பு, உங்களுக்கு விருப்பமான இறைவனை வணங்குங்கள். பின்பு சொல்லிக் கொடுத்த் குருவை வண்ங்கவும். பின்பு, மூன்று மூறை மூச்சை நன்றாக உள்ளே இழுத்து நன்றாக வெளியே விடவும்.  மனதை ஒருமுகப் படுத்துங்கள்.   இன்று என்னென்ன ஆசனங்கள் பழக வேண்டும் என்பதை மனதில் வரிசை படுத்திக் கொள்ளுங்கள்.

தொடக்கத்தில் மெதுவாக பழகுங்கள்.ஒரு ஆசனத்திற்கும் அடுத்த ஆசனத்திற்கும் இடையே, கால்களை, கைகளை நீட்டி, பரப்பி , முதுகு தரையில் நன்றாக படும்படி படுத்து,  ஓய்வு எடுங்கள்.  உங்கள் கவனம் முழுதும் உடல் மீதே இருக்கட்டும்.


யோகாவில் நேரம்:

யோகாவில், நேரத்தை, மூச்சைக் கொண்டு கணக்கிடுகிறார்கள். ஒரு முறை  மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடும் நேரத்தை ஒரு மூச்சு எனக் கணக்கிடுகிறார்கள். யோக ஆசனம் பழங்கும் போது, ஆசனத்தின் ஒரு நிலையை  அடைந்ததும், அந்த நிலையில் எவ்வளவு நேரம் இருக்க வேண்டும் என்பதை மூச்சை கொண்டு கணக்கிடுகிறார்கள். ஒரு மூச்சு, இரண்டு மூச்சு, மூன்று மூச்சு என்று.
----------------------------------------------------------------------------------------------

பவன முக்தாசனம் - முதல் நிலை.

 மல சிக்கல் மன சிக்கலுக்கு காரணம். இந்த பவன முக்தா ஆசனம் மல சிக்கலுக்கு அருமருந்து. இந்த ஆசனம் பழகுவதால் மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம். பவனம் என்றால் காற்று; முக்தா என்றால் விடுதலை. பவன முக்தாசனம் என்றால் காற்று விடுக்கும் ஆசனம் என்று பொருள். இந்த ஆசனம் பழகுவதால் உண்டாடும் பலங்கள்:

பலங்கள்-

Ø  வயிற்றில் இருக்கும் தேவையற்ற காற்று வெளியேரும்.
Ø  மலம் நன்றாக வெளியேறும்.
Ø  தொப்பை குறையும்.
Ø  செரிமானம் நன்றாக இருக்கும்;  
Ø  பசி எடுக்கும்;
Ø  வயிற்று பொறுமல் அகலும்.
Ø  உடல் சுறுசுறுப்படையும்;
Ø  மன அழுத்தம் குறையும்;
Ø  எண்ணங்கள் தெளிவாகும்;
Ø  மலக்குடலில் உள்ள அழுக்குகள் வெளியேறும்.
Ø  இடுப்பு மூட்டுக்கள் தளர்வடையும், இரத்த ஓட்டம் நன்றாக இருக்கும்,

செய்முறை.

கால்களை நீட்டி, முதுகு தரையில் நன்றாக பதியும்படி படுத்துக்கொள்ளவும். மூன்றிலிருந்து ஆறு முறை மூச்சை நன்றாக இழுத்து விடவும். பின்பு மூச்சு ஓட்டத்தை கவனிக்கவும்.

இப்போது, வலது காலை மடக்கி, வலது கால் பாதத்தை  இடது முட்டிக்கு அருகில் வைத்துக்கொள்ளவும். இரு கை விரல்களையும் கோர்த்து, வலது முட்டியைப் பிடித்துக் கொள்ளவும். முதுகு தரையில் ஒட்டி இருக்க வேண்டும். உங்கள் கைகளுக்கு முட்டி எட்டவில்லை என்றால், காலை சற்று உயர்த்தி, முட்டி கைகளுகுள் வரும்படி செய்துகொள்ளுங்கள்.

மூச்சை நன்றாக உள்ளே இழுக்கவும், மெல்ல மூச்சை விட்டுக்கொண்டே கைகளால் வலது முட்டியை வயிற்றை நோக்கி இழுக்கவும். மூச்சு முழுவதும் வெளியேறும் வரை, காலை வயிற்றின் அருகில் கொண்டுவர முயலுங்கள். எவ்வளவு முடியுமோ அவ்வளவு மட்டும் வயிற்றின் அருகில் கொண்டுவரவும். பின்பு தானாக மூச்சு உள்ளே இழுக்கப்படும். இப்போது மூச்சை உள்ளே இழுக்கும் போது வலது காலை மெல்ல, விடுவித்து பழைய நிலைக்கு எடுத்துச் செல்லுங்கள்.

முழுவதும் மூச்சை உள்ளே இழுத்ததும், மீண்டும் மூச்சை வெளியே விட்டவாறு வலது கால் முட்டியை வயிற்றின் அருகில் கொண்டுவர முயலுங்கள்; முடிந்த வரை வயிற்றின் அருகில் கொண்டுவாருங்கள். மூச்சு முழுவதும் வெளியேறியதும், மூச்சு தானாக உள்ளிழுக்கப்படும். மூச்சை உள்ளிழுத்தவாறு மெல்ல கால்களை விடுவித்து, பழைய நிலைக்கு எடுத்துச்செல்லவும். இவ்வாறு மூன்று மூறை செய்யவும். முடிந்ததும் வலது காலை தரையில் நீட்டி ஓய்வு எடுக்கவும்.

இப்போது  இடது காலை மடக்கி, மூன்று முறை, மேற்சொன்ன வகையில் செய்யவும். முடித்ததும் சிறிது ஓய்வு எடுக்கவும்.

அடுத்து, இரு கை விரல்களையும் கோர்த்து  இரண்டு கால்களையும் ஒரே நேரத்தில் மடக்கி பிடித்துக் கொண்டு, மூச்சை நனறாக உள்ளே இழுத்துக் கொள்ளுங்கள். பின்பு மூச்சை விட்ட வாறு இரு கால் முட்டிகளையும் வயிற்றை நோக்கி இழுக்க வேண்டும்.  மூச்சு முழுவதும் வெளி விட்ட பின்பு, மூச்சு தானாக உள்ளே இழுக்கப்படும். மூச்சை உள்ளே இழுத்துக் கொண்டே இரு கைகளையும் மெல்ல தளர்த்தி, கால் முட்டிகளை பழைய நிலைக்கு எடுத்துச் செல்லுங்கள். இவ்வாறு மூன்று மூறை செய்யுங்கள். 

பின்பு கால்களை தரையில் நீட்டி, உள்ளங்கைகள் விட்டம் நோக்கி இருக்கும் படி வைத்து  ஓய்வு எடுங்கள்.
  


=========================================================
நேற்று( 10-2-2019 ), சென்னை அம்பத்தூரில் உள்ள ஞானமூத்தி நகரில்,   தவத்திரு வள்ளல் கன்னியப்ப சுவாமிகள் அவர்களின்25 ஆம் ஆண்டு நினைவு நாள் மற்றும் 59வது ஆண்டு விழா, சிறப்பாக இனிதே நடந்து முடிந்தது.




புரிதல்
தலையால் தரையில் சற்று நேரம் நின்றேன்,
தலைகீழாய் கண்டேன் சகலமுமே புதிய புரிதல்!

No comments:

Post a Comment